உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு அறிவிப்பிற்கு பின்பும், "எண்டோ சல்பான் ஊடுருவல்

அரசு அறிவிப்பிற்கு பின்பும், "எண்டோ சல்பான் ஊடுருவல்

சென்னை : 'தமிழகத்தில் எண்டோ சல்பான் பூச்சிக்கொல்லி மருந்தை வைத்திருக்கவோ, விற்கவோ கூடாது' என, விவசாயத் துறை அமைச்சர் செங்கோட்டையன், சட்டசபையில் தெரிவித்தார். அரசு உத்தரவை மீறி, கிராமப் பகுதிகளில் இந்த மருந்தின் பயன்பாடு இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. இந்தியாவில் எக்செல், ஹிந்துஸ்தான், கோரமண்டல் ஆகிய நிறுவனங்கள், எண்டோ சல்பான் பூச்சிக்கொல்லி மருந்தை தயாரித்து வந்தன. ஆண்டுக்கு 4,500 டன் உள்நாட்டு தேவைக்காகவும், 4,000 டன் வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்தியாவில் உள்ளூரில் பயன்படுத்தப்பட்ட 4,500 டன் எண்டோ சல்பான் பூச்சிக்கொல்லி மருந்தின் அளவு, உலக அளவிலான பயன்பாட்டிலேயே மிகவும் அதிகம். கேரளாவில், முந்திரித் தோட்டங்களில் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த, எண்டோசல்பான் பூச்சிக்கொல்லியை, கடந்த 20 ஆண்டுகளாக வான் வழியாக தெளித்து வந்தனர். கேரளாவில் முந்திரி காடுகளை ஒட்டிய பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடி இனமான கோரகா, மெல்ல அழிந்து வரும் தகவல், கேரள அரசுக்கு சென்றது. கடந்த 2006ம் ஆண்டு, கேரளாவில் எண்டோ சல்பான் மருந்தின் பயன்பாட்டால் 135 பேர் உயிரிழந்ததை அம்மாநில அரசு உறுதி செய்தது. 2010ம் ஆண்டு முதல் எண்டோ சல்பான் பூச்சிக்கொல்லி மருந்து, கேரளாவில் தடை செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவும் தற்காலிகமாக தடை செய்துள்ளது. அதன் எதிரொலியாக, தமிழகத்தில் அம்மருந்தை தடை விதிக்க வேண்டுமென, கடந்த ஆட்சியில் விவசாய சங்கத்தினர் வலியுறுத்தினர். தற்போது, சட்டசபையில் நடைபெற்ற விவசாயத்துறை மானியக் கோரிக்கையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன், எண்டோ சல்பான் மருந்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டுமென பேசினார். விவசாயத் துறை அமைச்சர் செங்கோட்டையன், 'தமிழகத்தில் எண்டோ சல்பான் பூச்சிக்கொல்லி மருந்தை வைத்துக் கொள்ளவோ, விற்கவோ கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்' என பேசினார். இது குறித்து விவசாயி பழனிச்சாமி என்பவர் கூறியதாவது: தமிழக அரசு, இப்போது தான் சட்டசபையில் எண்டோ சல்பானுக்கு தடை விதித்துள்ளதாகக் கூறியுள்ளது. கிராமப்புறங்களில் மருந்தின் பயன்பாடு இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. தமிழக அளவில் உடனடியாக, அனைத்து பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை கடைகளிலும் சம்பந்தப்பட்ட துறையினர் திடீர் சோதனை நடத்தினால், டன் கணக்கில் பூச்சிக்கொல்லி மருந்தை பறிமுதல் செய்யலாம். பூச்சிக்கொல்லி மருந்துக் கடைக்காரர்களுடன், விவசாயத்துறை அதிகாரிகள் சிலருக்கு மறைமுக தொடர்பு இருக்கிறது. இவ்வாறு விவசாயி கூறினார். இது குறித்து, இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியிருப்பதாவது:இயற்கை வழியில் செய்யும் விவசாயமே, நீடித்து நிற்கும். இயற்கை வழி என்பது, யூரியாவிற்கு பதில், மாட்டுச் சாணத்தைப் போடுவது மட்டும் இல்லை. உயிர் உள்ள இயற்கை; உயிர் இல்லாத இயற்கை. இவற்றிற்கு இடையில் உள்ள உறவுகளை அறிந்து, பயிர் செய்வதே இயற்கை விவசாயம். பயிர் செய்யப்பட்ட செடியில், பூச்சிகள் தாக்கம் மிகவும் குறைவு. அவற்றை உண்டு வாழும் பூச்சிகளும், குருவிகளுமே உலகில் அதிகம். பாதிப்பு ஏற்படுத்தும் பூச்சிகளை அழிப்பதற்காக, பூச்சிக்கொல்லி மருந்தினை தெளிக்கும் போது, நன்மை தரும் பூச்சிகள் மடிந்தன. அதை நம்பி வாழும், அரிய வகை பறவை இனங்களும் அழிந்து வருகின்றன. எண்டோசல்பானை தயாரிக்கும் ஐரோப்பிய நாடுகள், அவர்களது நாடுகளில் அதன் பயன்பாடுகளை நிறுத்தி விட்டு, டன் கணக்கில் உற்பத்தி செய்து, நம்மைப் போன்ற ஏமாந்த நாடுகளுக்கு அனுப்பி, கொள்ளை லாபம் பார்க்கின்றன. விவசாயிகள் பாரம்பரிய இயற்கை விவசாயத்திற்கு மாறினால், வருங்கால மனித குலத்தை எண்டோசல்பானின் தாக்கத்தில் இருந்து காப்பாற்றலாம். இவ்வாறு, பேட்டியில் கூறியுள்ளார். உலகப் போரில் உருவானது எண்டோசல்பான், முதன் முதலில் பூச்சியைக் கொல்வதற்காக கண்டு பிடிக்கப்படவில்லை. இரண்டாம் உலகப் போரில், ரஷ்யப்படை வீரர்களைக் கொலை செய்வதற்காக, கிணற்றிலும், ஆற்றிலும் கொட்டுவதற்காக, ஹிட்லர் படையைச் சேர்ந்த விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. போர் முடிந்த பின், வெளிநாட்டு நிறுவனங்கள், பூச்சி மருந்து என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி, கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை