உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுநீரக நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் "டயாலிஸிஸ்

சிறுநீரக நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் "டயாலிஸிஸ்

மதுரை : இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால் சிறுநீரக நிபுணர்கள் ஆயிரம் பேர் என்ற அளவில்தான் உள்ளனர். இவர்களில் ஆண்டுக்கு 3,500 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. மீதியுள்ளோர் விழிப்புணர்வு இல்லாமை, பொருளாதார பிரச்னை போன்ற காரணங்களால் சிறுநீரக பாதிப்பை உணராமலோ, உணர்ந்தும் சிகிச்சை பெற இயலாதவர்களாகவோ பரிதாபகரமான நிலையில் உள்ளனர்.

பூகம்பம், சுனாமிக்களால் அவ்வப்போது ஆயிரமாயிரம் பேர் கொத்துக் கொத்தாக உயிரிழக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 9 லட்சம் பேர் சிறுநீரக பாதிப்பால் உயிரிழக்கின்றனர் என புள்ளி விபரம் கூறுகிறது. இது ரோடு விபத்து, புற்றுநோயால் இறப்போரைவிட மிகமிக அதிகம்.

சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு பல கட்டங்களுக்குப் பிறகே அது செயலிழக்கிறது. இந்நிலையில்தான் ரத்தத்தை சுத்திகரிக்கும் சிறுநீரகங்களின் பணியை (டயாலிஸிஸ்) இயந்திரங்கள் செய்கின்றன. இச்சிகிச்சை தேவைப்படுவோர் வாரத்திற்கு 3 முறையோ, 2 முறையோ சிகிச்சை பெற வேண்டும்.

ஒரு முறை டயாலிஸிஸ் செய்ய 4 மணி நேரம் தேவை. ஒரு நிமிடத்திற்கு 250 மி.லி., முதல் 300 மி.லி., ரத்தம் உடலில் இருந்து வெளியே வந்து சுத்திகரிக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள யூரியா, கிரியாட்டினின், தேவையற்ற அமிலங்கள், அதிகப்

படியான நீர் பிரிக்கப்படுகின்றன. இவற்றை பிரிக்காவிட்டால் அதிகப்படியான நீரால் நுரையீரலில் நீர்கோர்த்துக் கொள்ளும், ரத்தஅழுத்தம் கூடும். கால் வீக்கம் ஏற்படும். ஒரு சில நாட்களில் உயிரிழப்பும் ஏற்படும். எனவே ரத்தத்தை சுத்திகரிக்க டயாலிஸிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையே தீர்வு.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு, மாற்று உறுப்பு கிடைப்பது அரிதான நிலையில் டயாலிஸிஸ் கைகொடுக்கிறது. மதுரையில் பலர் இச்சிகிச்சை தேவைப்படும் நிலையில் உள்ளனர். ஒருமுறை இச்சிகிச்சை பெற ரூ. 1300 முதல் 1500 வரை தேவைப்படுகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் வசதி இருந்தும், முறையாக செயல்படவில்லை.

இந்நிலையில் ஆய்வுக் கூடம் போல, குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் மையங்கள் மதுரையில் துவக்கப்பட்டுள்ளன. மதுரை கோமதிபுரம் மற்றும் தெற்குவெளிவீதியில் 'சாஸ்தா டயாலிஸிஸ் சென்டரில் ஒரு அமர்வுக்கு கட்டணம் ரூ. 700. இம்மையத்தின் சேவையை அறிந்து சிருங்கேரி சாரதா மடம் மற்றும் லயன்ஸ் சங்கம் ஆகியவை இரு டயாலிஸிஸ் இயந்திரங்களை வழங்கியுள்ளன.

மைய நிறுவனர் டாக்டர் எஸ்.பழனிராஜன் கூறியதாவது: சிறுநீரகம் நம்மை ஒரு தாய்போல காக்கிறது. அவை பழுதானால், நாம் அவற்றை குழந்தைகளைப் போல பாதுகாக்க வேண்டும். சிறுநீரக நோயாளிகள் 'டயட், டயாலிஸிஸ், டிரக்' என்ற '3டி'க்களை சரியாக கடைபிடித்தால், 4வது 'டி'யான 'டெட்' (இறப்பை) தவிர்க்கலாம்.

திருப்புவனத்தை சேர்ந்த 'மெக்கானிக்' பாண்டியராஜ், அடிக்கடி டயாலிஸிஸ் செய்ய வந்தார். ரெகுலராக வந்ததால் அவரே பழகிவிட்டார். இதையடுத்து அவருக்கு இம்மையத்திலேயே டயாலிஸிஸ் பயிற்சி, சான்றிதழ் அளித்து, தற்போது அவரும் ஒரு டெக்னீசியனாக உள்ளார். இதேபோல சோழவந்தான் தனசேகரனும், தந்தைக்கு உதவியாக வந்தார். அவரும் டயாலிஸிஸ் பழகியபின் டெக்னீசியனாகிவிட்டார். இதேபோல ரெகுலராக வருவோர் தானாகவே பழகிவிடுகின்றனர். அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கிறோம் என்றார்.

யாருக்கு பாதிப்பு வரும் : சிறுநீரக பாதிப்புக்கு அறிகுறியே இருக்காது. ஏற்கனவே சிறுநீர்ப் பாதையில் நோய் தொற்று ஏற்பட்டவர்கள், சிறுநீரக கல் பாதிப்புள்ளவர்கள், ரத்தஅழுத்தம், சர்க்கரை நோயாளிகள், குண்டாக இருப்பவர்கள், பரம்பரையில் சிறுநீரக பாதிப்புள்ளவர்கள், நீண்ட நேரம் பயணம் செய்தபின் கால்வீக்கம் ஏற்படுவோர் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சிறுநீரக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவர்களின் சிறுநீரில் 'அல்பமின்' என்ற புரதக்கழிவு வெளியேறினால் அது மோசமான அறிகுறி.

சிறுநீரக நோயாளிகளின் உணவு : இந்நோயாளிகள் புரதச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடலாம். அதேசமயம் புரதம் நிறைந்த இறைச்சியை தவிர்க்க வேண்டும். பொட்டாசியம் நிறைந்த இளநீர், பழஜூஸ், சூப் வகைகள், குளிர்பானங்கள், உலர்ந்த திராட்சை, கொட்டை வகைகளை தவிர்க்க வேண்டும். இவை 'சயனைடு' போல மாறி உயிரை பறித்துவிடும். ராகி, பருப்பு வகைகள், ரவை, மைதா, முட்டையின் வெள்ளைக்கரு, தோல் உரித்த கோழி, மீன் உட்பட கடல் உணவு வகைகள் எடுக்கலாம். சீரான உடற்பயிற்சியும் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை