மருந்தகங்களில் விற்கப்படும் 145 மருந்துகள் தரமற்றவை
சென்னை : மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் மருந்தகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையில், சர்க்கரை நோய் உள்ளிட்ட 145 மருந்துகள் தரமற்றவையாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.நாட்டில் விற்கப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும், மத்திய, மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் வாயிலாக ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோல, போலி மருந்துகள் கண்டறியப்பட்டு, அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த ஜனவரியில் மட்டும், 1,000க்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.அவற்றில், சளி தொற்று, கிருமி தொற்று, சர்க்கரை நோய், ஜீரண மண்டல பாதிப்பு, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும், 145 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அதன் விபரங்கள் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியத்தின், 'cdsco.gov.in' என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விபரங்களை, மக்கள் தெரிந்து விழிப்புணர்வுடன் செயல்படலாம் என, மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.