உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணியில் அ.தி.மு.க., வேண்டாம்: விஜய்

கூட்டணியில் அ.தி.மு.க., வேண்டாம்: விஜய்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, த.வெ.க., தலைவர் விஜய் விரும்பவில்லை என்றும், தனித்து போட்டியிடவே அவர் தயாராகி வருவதாகவும், விஜயின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறார். கூட்டணி வைக்கவும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரவும் தயாராக இருப்பதாக கூறியிருந்த விஜய், தற்போது தன் மனநிலையை மாற்றிக் கொண்டுள்ளார் என்றே தெரிகிறது.கடந்த 2024 பிப்ரவரி 2ல், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் துவக்கினார். லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல், 2026 சட்டசபை தேர்தலே தன் இலக்கு என அறிவித்த அவர், அதற்கான பணிகளை ஓராண்டுக்கு https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dttsb4bn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முன்னரே ஆரம்பித்துள்ளார்.கடந்த அக்டோபர் 27ல், விக்கிரவாண்டியில் த.வெ.க.,வின் முதல் மாநாட்டை நடத்திய விஜய், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் இணைந்து, சட்டசபை தேர்தல் தொடர்பாக, இரண்டு கட்ட ஆலோசனைகளை நடத்தியுள்ளார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில், பிரசாந்த் கிஷோருடன் இணைந்து, தி.மு.க.,வுக்கு தேர்தல் வேலை செய்த ஆதவ் அர்ஜுனா, இப்போது த.வெ.க.,வில் இணைந்து, தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.பிப்ரவரி 26ல், த.வெ.க.,வின் இரண்டாம் ஆண்டு விழா, மாமல்லபுரம் அருகே நடந்தது. அதில் பங்கேற்று பேசிய பிரசாந்த் கிஷோர், 'தமிழகத்தின் புதிய நம்பிக்கை விஜய். தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை அவர் ஏற்படுத்துவார். 2026 சட்டசபை தேர்தலில், விஜய் வெற்றி பெறுவார்' என்று கூறியிருந்தார்.இந்நிலையில், தனியார் செய்தி சேனலுக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டி:வரும் 2026 சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே விஜயின் முடிவு. த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க., விரும்புகிறது; ஆனாலும், விஜய் அதை விரும்பவில்லை. தனித்து போட்டியிட்டு, விஜய் ஆட்சி அமைப்பார். தனிப் பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளில் த.வெ.க., வெற்றி பெறும்.பீஹார் தேர்தலில் எனக்கு உதவி செய்வதாக விஜய் உறுதி அளித்துள்ளார். அங்கு, விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முடிவில் மாற்றம்

விக்கிரவாண்டியில் நடந்த த.வெ.க., முதல் மாநாட்டில் பேசிய விஜய், 'அரசியலில் தனிப் பெரும்பான்மை கிடைத்தாலும், அரசியலில் நம்முடன் கலந்து வருபவர்களுக்கு, ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தரப்படும்' என்று கூறியிருந்தார்.இதனால், சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்கவும், கூட்டணி ஆட்சிக்கும் அவர் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்தே, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி காய் நகர்த்தி வந்தார்.இந்நிலையில், த.வெ.க., தனித்து போட்டியிடும் என, விஜயின் அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் அறிவித்திருப்பது, கூட்டணி தொடர்பான தன் முடிவை விஜய் மாற்றிக் கொண்டிருப்பதையே காட்டுகிறது. விஜய் தனித்து போட்டியிடுவது உறுதியானால், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - த.வெ.க., - நாம் தமிழர் என, ஐந்துமுனை போட்டி ஏற்படும் சூழல் உருவாகும்.கடந்த 2019 லோக்சபா தேர்தல் முதல், தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், வி.சி., - ம.தி.மு.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவை உள்ளன.இரண்டு லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை, உள்ளாட்சி தேர்தலில் வென்ற இக்கூட்டணியை உடைக்க, அ.தி.மு.க., மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இப்போது விஜயும் கைவிரித்து விட்டதால், 2021 போல, பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டிய நிலை, அ.தி.மு.க.,வுக்கு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

விஜய் மனநிலையில் மாற்றம் வந்தது எப்படி?

தி.மு.க., கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றால், அதற்கு, அ.தி.மு.க., கூட்டணியில் த.வெ.க., சேர வேண்டும் என்று, விஜய்க்கு பல தரப்பில் இருந்தும் ஆலோசனை சொல்லப்பட்டது. அதை ஏற்று, அ.தி.மு.க., தரப்பில் சிலருடன் பேச்சும் நடத்தப்பட்டது. அதில், பழனிசாமி தரப்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக தெரிகிறது.* அ.தி.மு.க., தான் பெரிய கட்சி; பல தேர்தல்களை சந்தித்து, தன் ஓட்டு வங்கியை நிரூபித்திருக்கிறது. அதனால், அ.தி.மு.க., தலைமையில் தான் கூட்டணி. அதில், த.வெ.க., இடம்பெற வேண்டும்* த.வெ.க.,வுக்கு இதுதான் முதல் தேர்தல். இதுவரை தங்களுக்கான ஓட்டு வங்கி எவ்வளவு என்பதை நிரூபிக்காத சூழலில், அக்கட்சிக்கான தொகுதி எண்ணிக்கையை அ.தி.மு.க.,வே முடிவு செய்யும்* அ.தி.மு.க., தலைமையில் அமையும் கூட்டணியில் இடம் பெறலாம். ஆனால், ஆட்சியில் பங்கு தரப்பட மாட்டாது. கூட்டணி ஆட்சிக்கு அ.தி.மு.க., ஒருபோதும் முன்வராது* எந்த நிலையிலும் முதல்வர் பதவியை விட்டுத்தர முடியாது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளராக இருப்பார். அவரை முன்னிறுத்தி தான் விஜய் பிரசாரம் செய்ய வேண்டும்.விஜய் தரப்பில் பேச்சு நடத்தச் சென்றவர்கள், இதையெல்லாம் அவரிடம் கூறியுள்ளனர். அதையடுத்து, இந்த கூட்டணி அவசியமா என்பது குறித்து, 'சர்வே' நடத்தி அதன் முடிவுகளை அளிக்குமாறு, வியூக வகுப்பாளர்களிடம் விஜய் கூறியிருந்தார்.அதன்படி, கடந்த மாதத்தில் தமிழகம் முழுதும் ரகசிய சர்வே நடத்தப்பட்டுள்ளது. அதில், த.வெ.க., தனித்து போட்டியிட்டாலே, 18 சதவீத ஓட்டுகளை பெறும். தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., போன்ற கட்சிகள் தவிர்த்து, சிறிய கட்சிகளை துணைக்கு வைத்துக் கொண்டு தேர்தல் களத்தை சந்திக்கும் போது, 20 சதவீதத்துக்கும் கூடுதலான ஓட்டுகளை பெறும் என்றும், கருத்துக்கணிப்பு முடிவாக, விஜயிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., தனித்தனி கூட்டணி அமைத்து போட்டியிடும் சூழலில், த.வெ.க., தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டால், சீமான் உள்ளிட்ட ஐந்துமுனை போட்டியில், த.வெ.க.,வுக்கே கூடுதல் எம்.எல்.ஏ.,க்கள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் விஜயிடம் தெரிவித்துள்ளனர். சீமான் தனக்கென தனி பாதை வகுத்து செயல்படுவதாலேயே, பெரிய அளவில் ரசிகர் பட்டாளமோ, தொண்டர்களோ இல்லாமல் இருந்த அக்கட்சி, இன்றைக்கு 8.6 சதவீத ஓட்டுகளை பெற்றிருக்கிறது. ஏற்கனவே பெரும் எண்ணிக்கையில் ரசிகர் பட்டாளம் வைத்திருக்கும் விஜயால், தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் வியூக வகுப்பாளர்கள் கூறி உள்ளனர். இதையடுத்து, கட்சியின் முன்னணி தலைவர்களுடன் ஆலோசித்த விஜய், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லாமலேயே வரும் சட்டசபை தேர்தலை த.வெ.க., சந்திக்கும் என்ற அறிவிப்பை வெளியிடுமாறு, தன் ஆலோசகர் பிரசாந்த் கிஷோருக்கு அறிவுறுத்தி இருக்கிறார். இதில், இன்னொரு உள்விவகாரமும் ஒளிந்திருப்பதாக, அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறியதாவது:தொடர்ந்து, 11 தோல்விகளை சந்தித்த பிறகும், பழனிசாமி தன்னை மாபெரும் சக்தி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அதனாலேயே, த.வெ.க., உள்ளிட்ட கட்சிகளை தனக்கு கீழானதாக கருதி, அதற்கேற்ப, 'டீல்' பேச வைத்துள்ளார். இது, விஜய்க்கு பிடிக்கவில்லை. த.வெ.க., தனித்து போட்டியிடும் என அறிவிப்பதன் வாயிலாக, தேர்தலில் அ.தி.மு.க., தனித்து விடப்படுமோ என்ற பதற்றம், அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் ஏற்படும்.அதையடுத்து, த.வெ.க.,வுடன் இணக்கமாக சென்று, கூட்டணி அமைத்தால் மட்டுமே, அ.தி.மு.க.,வின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என, கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும் பழனிசாமிக்கு நெருக்கடி கொடுப்பர். அதன்பின், பழனிசாமி இறங்கி வந்து பேச்சு நடத்துவார்.இப்படியொரு திட்டத்துடன் கூட, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி கிடையாது என விஜய் தரப்பில் அறிவிப்பு வெளியிட வைத்திருக்கலாம். பின்னணியில் பல்வேறு அரசியல் கணக்குகள் இருப்பதால், இது த.வெ.க.,வின் இறுதி முடிவல்ல.இவ்வாறு அவர்கள் கூறினர். -நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ellar
மார் 02, 2025 17:17

கிஷோரின் முதலாளி எப்போதும் "யார் ஜெயிக்கக் கூடாது " என்பதற்குத்தான் வியூகம் கேட்பார்.... அடுத்து வென்றால் ஆட்சி செய்ய முடியாது என விஜய்க்கு தெரியும்.... ஆக இது தான் த.வெ.க வுக்கு தரப்படும் அறிவுரை... அப்புறம் என்ன... வந்துள்ள பெட்டியை திறந்து, வேலையை ஆரம்பித்து ஜூஸாக செய்திட வேண்டியது தான்.


vadivel
மார் 02, 2025 02:12

அப்பாடா . இப்ப அதிமுக கூட்டணி பலம் வாய்ந்ததாக போகிறது


சமீபத்திய செய்தி