சென்னை:'வாழை படத்தின் வாயிலாக, தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களை கூலிகளாக, கோழைகளாக்க வேண்டாம்' என, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.அவரது அறிக்கை:தாமிரபரணி ஆற்றின் இரு கரையோரங்களிலும் வாழும் தேவேந்திரகுல வேளாளர்களே, இன்றும் சிறுநில உடைமையாளர்களாக இருக்கின்றனர். எந்தவொரு சிறு அல்லது நடுத்தர விவசாயியும், தன் நிலத்திலும் உழவு செய்வார். அண்டை விவசாயி நிலத்திலும் உழவு செய்வார். களை எடுக்கவும் செய்வார். நெல்லையும் அறுப்பார். வாழையும் சுமப்பார். அது அடிமைத்தனமும் அல்ல; சுரண்டலின் மொத்த வெளிப்பாடும் அல்ல. நெல்லையும், வாழையையும் விளைவித்துக் கொடுத்ததுதான் இம்மக்களின் வரலாறு; சுமந்து கொடுத்தது அல்ல.வாழையை பற்றி பேசும்போது, மாபெரும் ஒரு சமுதாயத்தை கோழையாக்குகின்ற பேச்சுகளோ, நடிப்புகளோ, சினிமாக்களோ அறவே கூடாது. தன் இழந்த அடையாளத்தை, அதிகாரத்தை மீட்கப் போராடுகிற ஒரு சமுதாயத்தை, பெருமைப்படுத்த முயற்சி செய்ய முடியாமல் போய் இருக்கலாம்.ஆனால், அந்த சமுதாயத்தை இன்னும் கூலிக்காரர்களாகவே சித்தரித்து, சிறுமைப்படுத்துகிற போக்கு ஏற்புடையது அல்ல.அவர்களின் போராட்ட உணர்வுகளையும், குணங்களையும் மழுங்கடித்து யார், யாருடைய அரசியல் லாபங்களுக்காகவோ புதிய களம் அமைத்து கொடுக்கக்கூடிய விதமும் எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.எனினும், வாழை படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜ் பாராட்ட நினைக்கிறேன்; பாராட்டவும் முடியவில்லை;. திட்ட நினைக்கிறேன்; திட்டவும் முடியவில்லை.இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
வாழ வைக்கவில்லை'
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி உருளைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் சோ.தர்மன். இவர், எழுதிய 'சூல்' என்ற நாவலுக்கு, 2019ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இவர், 10 ஆண்டுகளுக்கு முன் 'வாழையடி' என்ற சிறுகதை எழுதியுள்ளார். அந்த கதையில் வரும் சில நிகழ்வுகள், வாழை திரைப்படத்தில் அப்படியே இடம்பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.இதுகுறித்து, சோ.தர்மன் கூறியதாவது:ஸ்ரீவைகுண்டத்தில் வாழைத்தார் சுமக்கும் சிறுவர்களின் கஷ்டத்தைப் பார்த்து, 'வாழையடி' என்ற சிறுகதை எழுதினேன். அக்கதையில், லாரி, டிரைவர், கிளீனர், இடைத்தரகர், முதலாளி, சிறுவர்கள், சிறுமியர், அவர்கள் படும் கஷ்டம், கூலி உயர்வு எல்லாம் உண்டு.ஆனால், டீச்சர், கர்ச்சீப், காலாவதியான பொருட்கள், கம்னியூஸ்ட் கட்சி சின்னம், துன்பவியல் விபத்து கிடையாது. வெகுஜன ஊடகமான சினிமாவுக்கு வந்ததால் வாழை கொண்டாடப்படுகிறது. ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்பே, சிறுகதையாக எழுதிய என் கதை இலக்கியமாகவே நின்று விட்டது. வாழை வாழவும் வைக்கும், தாழவும் வைக்கும்; என்னை வாழை வாழ வைக்கவில்லை. இலக்கியங்களை திரைப்படமாக்கும் முறை மற்ற மொழிகளில் நடைமுறைக்கு வந்துவிட்டது. கேரளாவில், 15 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. தமிழில் கொஞ்சம் தற்பொழுது வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.