3 வழித்தடங்களில் 160 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்க கட்டமைப்பு பணி துவக்கம்
சென்னை:சென்னை - கூடூர், அரக்கோணம் - ஜோலார்பேட்டை மற்றும் சேலம் - கோவை ஆகிய தடங்களில், மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்குவதற்கான கட்டமைப்பு பணிகள் துவங்கப்பட்டு உள்ளதாக, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தெற்கு ரயில்வேயில், சென்ட்ரல் - பெங்களூரு - மைசூர், சென்ட்ரல் - கோவை, எழும்பூர் - திருநெல்வேலி உட்பட பல்வேறு வழித்தடங்களில், 'வந்தே பாரத்' ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வகை ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு, 180 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் கொண்டவை. ஆனால், தற்போது மணிக்கு 110 முதல் 130 வேகத்தில் தான் செல்கின்றன. இந்த தடத்தில் செல்லும் மற்ற ரயில்களும் அதிகபட்சமாக, 120 கி.மீ., வேகத்தில் தான் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், வந்தே பாரத் உட்பட அனைத்து விரைவு ரயில்களின் வேகத்தையும் படிப்படியாக அதிகரிக்க, தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டமைப்பு பணிகளையும் துவங்கி உள்ளது.இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில்வே விதிப்படி, 'குரூப் ஏ' வழித்தடத்தில் ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு, 160 கி.மீ., வரை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை - கூடூர், அரக்கோணம் - ஜோலார்பேட்டை, சேலம் - கோவை வழித்தடங்களில் மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் இயக்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளை துவங்கி உள்ளோம். அதிக வளைவு பகுதி களை கண்டறிந்து நீக்குவது, பழைய மேம்பாலங்களை அகற்றி, புதிய பாலங்கள் அமைப்பது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. இம்மூன்று வழித்தடங்களிலும், அனைத்து கட்டமைப்பு பணிகளையும் முடிக்க, மூன்று ஆண்டுகள் வரை ஆகலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.