உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் செலவு பணம் பிரிப்பதில் தகராறு? திருவாரூர் மாவட்ட பா.ஜ., தலைவர் கைது

தேர்தல் செலவு பணம் பிரிப்பதில் தகராறு? திருவாரூர் மாவட்ட பா.ஜ., தலைவர் கைது

திருவாரூர்:குடவாசல் அருகே பா.ஜ., முன்னாள் நிர்வாகி அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில், திருவாரூர் மாவட்ட பா.ஜ., தலைவர் பாஸ்கரன் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேயுள்ள காவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மதுசூதனன், 42. இவர் பா.ஜ., விவசாய அணி, திருவாரூர் மாவட்ட பொறுப்பாளராக இருந்தார். இரு ஆண்டுகளுக்கு முன், இவரை அப்பொறுப்பில் இருந்து மாவட்ட தலைவர் பாஸ்கரன், 47, நீக்கினார். இதனால், இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட மதுசூதனன், பாஸ்கரன் குறித்து சமூக வலைதளங்களில் அவதுாறு கருத்துக்களை பதிவிட்டுள்ளார். இதனால், பகை உணர்வு மேலும் அதிகரித்தது. இந்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு, 7:45 மணிக்கு, குடவாசல் அருகில் உள்ள ஓகையில், கடை ஒன்றின் முன்பாக மதுசூதனன் நின்றுள்ளார்.அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர், மதுசூதனனை சரமாரியாக வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதைப் பார்த்ததும் கும்பல் தப்பி ஓடியது. படுகாயம் அடைந்த மதுசூதனன், திருவாரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.குடவாசல் போலீசில், பா.ஜ., மாவட்ட தலைவர் பாஸ்கரன், பொதுச்செயலர் செந்தில் அரசன் மற்றும் அடையாளம் தெரியாத நான்கு பேர் மீது மதுசூதனனின் மனைவி ஹரிணி புகார் கொடுத்தார். இதையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தனிப்படை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார். தனிப்படை போலீசார், மதுசூதனன் வெட்டப்பட்ட நேரத்தில் சந்தேகப்படும்படி நடமாடியவர்களை கண்டறிய, அப்பகுதியில் இருந்த 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், இரண்டு இருசக்கர வாகனங்களில் நான்கு பேர் வந்ததை அறிந்தனர். கும்பகோணம் தாராசுரத்தைச் சேர்ந்த சரவணன், 24 மற்றும் திருவாரூர் காட்டூரைச் சேர்ந்த ஜெகதீசன், 30 ஆகியோர், இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். திருவிடைமருதுார் விஜய், கும்பகோணம் கருப்பூரை சேர்ந்த தீனதயாளன் ஆகியோர் மற்ற இருவர் என்பது கண்டறியப்பட்டது. தலைமறைவாகி இருக்கும் அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். கூலிப்படையினரை ஏவி விட்டது பா.ஜ., மாவட்ட தலைவர் பாஸ்கரன், பொதுச்செயலர் செந்தில் அரசன் என தெரியவர, போலீசார் அவர்களையும் தேடி வந்தனர். இதில், பாஸ்கரன் கோயமுத்துாரில் தங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்து, அங்கு சென்று அவரை கைது செய்தனர். மற்ற மூவரை போலீசார் தேடி வருகின்றனர். மதுசூதனனுக்கும், பாஸ்கரனுக்கும் நிலவிய முன் விரோதம் காரணமாகவே, மதுசூதனன் தாக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், நாகப்பட்டினம் தொகுதிக்காக அளிக்கப்பட்ட தேர்தல் செலவுக்கான பணத்தை பிரித்துக் கொண்டதில் ஏற்பட்ட தகராறால் தான், தாக்குதல் சம்பவம் நடந்ததாக கட்சியினர் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ