உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனவு இல்லம் பயனாளிகள் 2 மரம் வளர்ப்பது கட்டாயம்

கனவு இல்லம் பயனாளிகள் 2 மரம் வளர்ப்பது கட்டாயம்

தமிழக அரசின், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகள், மரக்கன்று நட்டு வளர்ப்பது, வரும் நிதியாண்டில் இருந்து கட்டாயமாகியுள்ளது.கிராமப்புற மக்களின் கான்கிரீட் வீடு கட்டும் கனவை நினைவேற்றும் வகையில், 3.50 லட்சம் ரூபாய் மானியத்துடன், கலைஞர் கனவு இல்லம் திட்டம் துவக்கப்பட்டது. நடப்பு ஆண்டில், தலா, 350 சதுரடி பரப்பில், ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில், பயனாளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீடுகட்டும் பணி துவங்கி, அஸ்திவார பணி முடிந்தால், 75,000; ஜன்னல் மட்டம் வரையிலான பணிக்கு, 60,000; கூரைமட்ட பணிக்கு, ஒரு லட்சம்; பணி முடிந்ததும், 75,000 ரூபாய் விடுக்கப்படுகிறது. பயனாளிக்கு, ஊரக வேலை உறுதித் திட்டத்தில், 100 நாள் சம்பளமாக, 31,900; கழிப்பிட மானியம், 12,000 ரூபாயும் வழங்கப்படும். வரும் ஆண்டில், தேசிய வேலை உறுதித் திட்டத்தில், 4,000 ரூபாய் மதிப்பீட்டில் உறிஞ்சு குழி அமைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.வீடு கட்டும் பணி துவங்கும் போதே, சரியான இடத்தை தேர்வு செய்து, குறைந்தபட்சம் இரண்டு மரக்கன்றுகளாவது நட்டு வளர்க்க வேண்டுமென, ஊரக வளர்ச்சித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதாவது, மரம் வளர்ப்பும், உறிஞ்சு குழி அமைப்பதன் மூலமாக, மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடிநீர் செறிவூட்டும் பணியும் கட்டாயமாக மாறியுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கூறியதாவது:கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகளுக்கு, மரம் வளர்ப்பு கட்டாயமாகியுள்ளது. வீட்டின் முன், குறைந்தபட்சம் இரண்டு மரக்கன்றுகள் நட்டு, வீடு பணி முடியும் போது, 6 அடி உயரம் வளர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான், கடைசி கட்ட மானியம் விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, ஒரு லட்சம் வீடு கட்டும் போது, குறைந்தபட்சம் இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதும் உறுதி செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி