| ADDED : ஏப் 23, 2024 10:43 PM
மதுரை:அதிக புகையை வெளியிடும் வாகனங்களை பறிமுதல் செய்ய, பறக்கும் படைகள் அமைக்க தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:வாகனங்களை திரவ எரிபொருளிலிருந்து, காஸ் பயன்பாட்டிற்கு மாற்றினால் புகையை கட்டுப்படுத்த முடியும். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல்களை போக்குவரத்துத்துறை நடைமுறைப்படுத்தவில்லை. புகை மாசால் மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது. அதிக புகையை வெளியிடும் வாகனங்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்க வேண்டும். மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய மாநில, மாவட்டம், தாலுகாக்கள் அளவில் பறக்கும் படைகள் அமைக்க வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு:மனுவை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், தமிழக தலைமைச் செயலர், போக்குவரத்துத்துறை செயலர், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர், டி.ஜி.பி., பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.