அ.தி.மு.க., வழக்கில் சபாநாயகர் ஆஜர்
சென்னை : அ.தி.மு.க., நிர்வாகி தாக்கல் செய்த அவதுாறு வழக்கில், சபாநாயகர் அப்பாவு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சபாநாயகர் அப்பாவு பேசும்போது, முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த 40 எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க.,வில் சேர தயாராக இருந்ததாகவும், அதை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுத்ததாகவும் தெரிவித்திருந்தார். அவரது பேச்சு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது எனக் கூறி, அந்த கட்சியின் வழக்கறிஞர் பிரிவு இணை செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ஆர்.எம்.பாபுமுருகவேல் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயவேல் முன் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் ஆஜராக, சபாநாயகர் அப்பாவுவுக்கு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, சபாநாயகர் அப்பாவு நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். 'தனக்கு சம்மன் வரவில்லை; நீதிமன்றத்தின் மீது மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் உள்ளது' என, நீதிபதியிடம் அப்பாவு தெரிவித்தார்.வழக்கு தொடர்பான ஆவணங்களை, அப்பாவு தரப்புக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை வரும் 26க்கு தள்ளி வைத்தார்.