உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டம் கிராமம்தோறும் விழிப்புணர்வு கூட்டம்

பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டம் கிராமம்தோறும் விழிப்புணர்வு கூட்டம்

திருப்பூர்:அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் கீழ் ஆண்டு முழுதும் நீர் பெற வேண்டுமானால், பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, கோரிக்கை வலுத்து வருகிறது.இது குறித்து, பாண்டியாறு திட்ட பூர்வாங்க பாசன சபை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரபு கூறியதாவது:எம்.ஜி.ஆர்., 1984ல் முதல்வராக இருந்தபோது, பாண்டியாறு - மாயாறு திட்டத்தை நிறைவேற்ற ஆர்வம் காட்டினார்.கால்கோள் விழா நடத்தும் அளவுக்கு ஏற்பாடு தீவிரமானது. நிலம் எடுப்பு பணிக்காக புளியம்பட்டி - நம்பியூர் சாலையில் உள்ள குட்டகம் பகுதியில் கல் நடப்பட்டது. திட்டம் நிறைவேறும் முன், பாசன சபைகளை ஏற்படுத்தவும், அப்போதைய அரசு அறிவுறுத்தியது.இந்நிலையில், பல்லடம், சூலுார், அவிநாசி பகுதிகளுக்கும் இத்திட்டத்தின் வாயிலாக தண்ணீர் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், அது தொடர்பான ஆலோசனையை அரசு மேற்கொண்டது. பாண்டியாறு - புன்னம்புழா நீர் பங்கீட்டில், தமிழகம் மற்றும் கேரளாவுக்கு, தலா, 7 டி.எம்.சி., நீர் என்ற அடிப்படையில் கேரளாவுக்கு வழங்கும், 7 டி.எம்.சி., நீரையும் நாமே பெற்றுக் கொண்டு, அதற்கு பதிலாக கேரளாவுக்கு மின்சாரம் வழங்குவது என்ற யோசனையை அடிப்படையாக கொண்டு, கேரள அரசுடன் பேச்சு நடத்த தமிழக அரசு முனைப்பு காட்டியது; கேரள அரசு ஒத்துழைப்பு வழங்காததால், திட்டம் கிடப்பில் போடப்பட்டது.தமிழக மூத்த பொறியாளர் சங்க செயலர் வீரப்பன் தலைமையிலான குழுவினர், இத்திட்டம் தொடர்பாக அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை வழங்கியுள்ளனர். இந்த இணைப்பு வாயிலாக, பவானிசாகர் அணைக்கு, 3 டி.எம்.சி., நீர் கூடுதலாக கிடைக்கும். இது, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் கீழ் பெறப்படும், 1.5 டி.எம்.சி.,நீரை விட இரு மடங்கு அதிகம்; ஆனால், அதற்காகும் செலவு, அத்திக்கடவு திட்ட மதிப்பீட்டில், 10ல் ஒரு மடங்கு மட்டும் தான்.திட்டத்தை நிறைவேற்ற, கேரள அரசின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை என்ற நிலையில், திட்டத்தை செயல்படுத்துவது எளிது. திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்க, கிராமம் தோறும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படும். அக்., 2ல் கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

புதர் மண்டிய அத்திக்கடவு - அவிநாசி திட்ட குளங்கள்

திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி, 1,914 கோடி ரூபாய் செலவில் அத்திக்கடவு - அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டப்பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. குளம், குட்டைகளுக்கு வரும் நீரை, நீரேற்று நிலையங்களில் இருந்தபடியே கண்காணிக்க, 'அவுட்லெட் மேனேஜ்மென்ட் சிஸ்டம்' என்ற இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை சோலார் தகடுகளின் உதவியுடன் சூரிய ஒளியில் இயங்குகின்றன. இத்தகைய 'ஹைடெக்' தொழில்நுட்ப உபகரணங்கள், அதோடு இணைத்து பொருத்தப்பட்டுள்ள குழாய், வால்வு மற்றும் பிற உபகரணங்களை சிலர் உடைத்து சேதப்படுத்துகின்றனர்; அவற்றை திருடியும் செல்கின்றனர். அவற்றை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை ஒருபுறமிருக்க, திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெரும்பாலான குளம், குட்டைகள் புதர்மண்டி காணப்படுகிறது. செடி, கொடிகள் வளர்ந்து, பொருத்தப்பட்டுள்ள ஓம்.எம்.எஸ்., கருவிகளையே சூழும் நிலை கூட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை