| ADDED : செப் 05, 2024 01:45 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு நேற்று சுற்றுப்பயணம் செய்து வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார்.மார்த்தாண்டம் பகுதியில் மிக மோசமாக சேதம் அடைந்திருந்த சாலைகளை நேற்று முன்தினம் இரவில் தற்காலிகமாக சீரமைக்க ஊழியர்கள் முயன்றனர். இதையறிந்த காங்., - எம்.எல்.ஏ., தாரகை கத்பர்ட் அங்கு சென்று அப்பணிகளை தடுத்து நிறுத்தினார்.அவர், 'அமைச்சர் வந்து சேதமடைந்த சாலைகளை பார்த்த பின் உரிய முறையில் சீரமைத்தால் போதும். அமைச்சருக்கு சேதம் அடைந்தது தெரியாமல் இருக்க, நீங்கள் இப்போது வேலை செய்ய வேண்டிய தேவை இல்லை. அவர் சேதத்தை பார்க்க வேண்டும்' என்றார்.எம்.எல்.ஏ., தன் முடிவில் உறுதியாக இருந்ததால் சீரமைப்பு பணி கைவிடப்பட்டது. இதையடுத்து, நேற்று காலையில் அந்த வழியே வந்த அமைச்சர் வேலு, சேதமடைந்த சாலைகளை பார்வையிட்டார்.பின், அவர் கூறியதாவது:களியக்காவிளை - நாகர்கோவில் இடையே 56 கி.மீ., துார சாலை, களியக்காவிளையிலிருந்து 12 கி.மீ.,க்கு மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. அந்த பகுதி உடனே சீரமைக்கப்படும்.மார்த்தாண்டம் மேம்பால அணுகு சாலைகள், மிகவும் குறுகலாக வாகனங்கள் ஒழுங்காக செல்ல முடியாத நிலையில் உள்ளன. அவற்றை அகலப்படுத்த கலெக்டர் வாயிலாக நிலம் கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.பின், கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம் - திருவள்ளுவர் சிலை இடையே அமைக்கப்படும் கண்ணாடி இழை கூண்டு பால பணிகளை ஆய்வு செய்த அமைச்சர், 'அப்பணி டிசம்பரில் முடியும்' என்றார்.