| ADDED : மே 31, 2024 11:14 PM
முதுகுளத்துார் : ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் வீடு கட்ட சவுடு மணல் அள்ள அனுமதி கேட்ட விவசாயிடம் ரூ.5000 லஞ்சம் பெற்ற கிராம உதவியாளர், வி.ஏ.ஓ.,வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.கமுதி அருகே கீழ வில்லானேந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி குமாரவேல் 50. இவர் அரசு திட்டத்தில் வீடு கட்டுவதற்கு மணல் அள்ள கமுதி தாலுகா அலுவலகத்தில் அனுமதி பெறச் சென்றார். அங்கு தங்களது புதுக்குளம் பகுதி வி.ஏ.ஓ., சித்ரா 30,என்பவரிடம்தாசில்தாரிடம் மணல் அள்ள அனுமதிக்கு பரிந்துரை செய்ய கேட்டார்.சித்தரா, மற்றும் கிராம உதவியார் வேல்முருகன் 29,ஆகியோர் லஞ்சமாக 10 ஆயிரம் கேட்டனர். முதலில் ரூ.5000 அட்வான்ஸ் கொடுத்தால் பணிகளை துவக்கி விடுவோம். உத்தரவு பெற்று தந்த பின் பாக்கி பணம் தந்தால் போதும் என தெரிவித்துள்ளனர்.லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ராமச்சந்திரனிடம் குமாரவேல் புகார் அளித்தார். இதையடுத்து ராமசந்திரன் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர்.இந்த பணத்தை கமுதி தாலுகா அலுவலகத்தில் மாற்றுப்பணியில் அலுவலக உதவியாளராக இருந்த கிராம உதவியாளர் வேல்முருகனிடம் குமாரவேல் கொடுத்துள்ளார்.அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.அவர் கொடுத்த தகவலின்பேரில் வி.ஏ.ஓ., சித்ராவையும் கைது செய்தனர்.