| ADDED : ஆக 11, 2024 01:19 AM
சென்னை: மதுரை மீனாட்சி அம்மன், திருவாரூர் தியாகராஜர் சுவாமி உள்ளிட்ட முக்கிய கோவில்களின் தேரோடும் வீதிகளில், தரைக்கு அடியில், 'கேபிள்' வாயிலாக மின் வினியோகம் செய்யும் பணியை, செப்டம்பர் 30க்குள் முடிக்குமாறு, பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.சென்னையில் சில இடங்களில் தரைக்கு அடியில் கேபிள்; மற்ற இடங்களில் கம்பி வாயிலாக மின் வினியோகம் செய்யப்படுகிறது. மழையின்போது மின்கம்பி அறுந்து விழுகிறது. இதனால், மின்தடை, மின்விபத்து ஏற்படுகிறது.தஞ்சை மாவட்டம், களிமேடு கிராமத்தில் சில ஆண்டுகளுக்கு முன் தேர்த்திருவிழாவில், தேரின் உச்சிப்பகுதி மின்கம்பியில் உரசியதில் விபத்து ஏற்பட்டது; 11 பேர் உயிரிழந்தனர். எனவே, கோவில் தேரோடும் வீதிகளில், தரைக்கு அடியில் கேபிள் வாயிலாக மின்சாரம் வினியோகிக்க வாரியம் முடிவு செய்தது. அதன்படி, தமிழகம் முழுதும், 14 முக்கிய கோவில்களில் அந்த பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. திட்டச்செலவு, 36 கோடி ரூபாய். வடகிழக்கு பருவமழை, அக்டோபர் இறுதியில் துவங்குகிறது. அதற்கு முன், செப்., 30க்குள் தேரோடும் வீதிகளில், கேபிள் பதிக்கும் பணிகளை முடிக்க, மின்வாரியம் உத்தரவிட்டு உள்ளது.