சென்னை: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு வரும் பயணியரின் பயண நேரத்தை குறைக்க, ஹெலிகாப்டர் சேவையை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.இருப்பினும், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தயாரிக்க, 'டிட்கோ'வுக்கு அனுமதி வழங்கப்படாமல் உள்ளது.உத்தரகண்ட், காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களின் சுற்றுலா தலங்களை, ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்கும் வசதி உள்ளது. அதற்காகவே, அம்மாநிலங்களுக்கு அதிகம் பேர் சுற்றுலா செல்கின்றனர்.தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும், ராமேஸ்வரம் கோவிலுக்கும், தனுஷ்கோடியை பார்க்கவும் பலர் வருகின்றனர்.அவர்கள், கோவைக்கு விமானத்தில் வந்து காரில் ஊட்டிக்கும்; மதுரைக்கு விமானத்தில் வந்து, கொடைக்கானல், ராமேஸ்வரம் செல்கின்றனர். இதனால், பயண நேரம் அதிகமாகிறது.சுற்றுலா தலங்களில் அதிக நேரம் இருக்க முடியாத நிலை ஏற்படுகிறது. தமிழகத்தின் பல நகரங்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஹெலிகாப்டரில் வந்துள்ளனர். இதற்காக, அந்நகரங்களில் ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டு உள்ளன.அவற்றை கண்டறிந்து, முக்கிய சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள் இடையே ஹெலிகாப்டர்கள் இயக்க, அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை, 'டிட்கோ' எனப்படும், தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் தயாரிக்க உள்ளது.இதற்கு அரசிடம், 2023 இறுதியில் அனுமதி கேட்கப்பட்டது; இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால், ஹெலிகாப்டர் சேவை திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா அல்லது கிடப்பில் போட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அரசிடம் விரைவாக அனுமதி பெற்று, ஹெலிகாப்டர் சேவைக்கான வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்து, செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்' என்றார்.