தோட்டத்தில் தொழிலாளி புதைத்த 176 கிராம் தங்கம், பணம் பறிமுதல்
அரக்கோணம் : ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கைகனுாரை சேர்ந்தவர் முருகன், 59; கூலி தொழிலாளி. இவரது மனைவி கவுரி, 50. இருவரும், அரக்கோணம், மசூதி தெருவிலுள்ள நகை கடைகள் பகுதியிலுள்ள கழிவுநீர் கால்வாய் மண்ணை சலித்து, அதிலுள்ள தங்கம் மற்றும் வெள்ளி துகள்களை சேகரித்து, பிழைப்பு நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன், வீட்டை புதுப்பித்து, 'டிவி' பிரிஜ், பேன் உள்ளிட்ட பொருட்களை முருகன் புதிதாக வாங்கினார். இவருக்கு, பணம் எப்படி வந்தது என, அப்பகுதியினர் சந்தேகமடைந்தனர். மேலும், அவரது வீட்டின் பின்புறம் தோட்டத் தில், தங்க பிஸ்கட் மற்றும் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் பரவியது. இதனால், பஞ்., தலைவி உமாமகேஸ்வரி புகார்படி, நேற்று முன்தினம் இரவு, அரக்கோணம் டவுன் போலீசார், ஏ.எஸ்.பி., யாதவ் கிரீஷ் அசோக், ஆர்.ஐ., ஜெயந்தி, வி.ஏ.ஓ., புவனேஸ்வரி, உள்ளிட்டோர், முருகன் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, 176 கிராம் தங்க பிஸ்கட் மற்றும் 1.10 லட்சம் ரூபாய், வெள்ளி கொலுசு ஆகியவை ஒரு பிளாஸ்டிக் கவரில் அடைத்து புதைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.முருகனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கழிவுநீர் கால்வாயில் தங்கம் மற்றும் வெள்ளி துகள்களை சேகரித்த போது, ஒரு தங்க பிஸ்கட் கிடைத்ததாகவும்... அதில் சிறு, சிறு பகுதியாக வெட்டி, அரக்கோணம், திருத்தணி, சோளிங்கர் பகுதி நகைக்கடைகளில் விற்று பணமாக்கி, அதன் வாயிலாக வீட்டை புதுப்பித்தது உள்ளிட்ட பணிகள் செய்ததாக கூறினார்.திருட்டு பயம் காரணமாக, தங்கம், பணம் ஆகியவற்றை புதைத்து வைத்ததாகவும் கூறினார். அவர் விற்பனை செய்த நகை எவ்வளவு, உண்மையில் கழிவுநீர் கால்வாயில் தான் அவை கிடைத்ததா அல்லது திருடப்பட்டதா என, பல்வேறு கோணங்களில் அரக்கோணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.