| ADDED : ஜன 25, 2024 01:29 AM
மதுரை:'லோக்சபா தேர்தலில் தமிழகத்தில், பா.ஜ., 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவதை இலக்காக வைத்து செயல்படுகிறது,'' என, மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.மதுரையில் அவர் கூறியதாவது:லோக்சபா தேர்தலில் இந்திய அளவில் 400 தொகுதிகளுக்கு மேல்; தமிழகத்தில் 25 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அதற்கேற்ப 5,515 ஓட்டுச்சாவடிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பிரதமர் மோடி தமிழ், தமிழ் கலாசாரம், பண்பாட்டுக்கான முக்கியத்துவத்தை அளித்து வருகிறார். தமிழகத்திற்கு, மத்திய அரசு எதுவுமே கொடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். கடந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழகத்திற்கென 2.47 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மத்தியில், காங்., கூட்டணி ஆட்சி நடந்தபோது, 95,000 கோடி ரூபாய் தான் வழங்கினர்.தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளை பா.ஜ., ஒரே துாரத்தில் வைத்துப் பார்த்தே செயல்படுகிறது. இண்டியா கூட்டணியில் பெரிய ஊழல் கட்சி தி.மு.க., தான். அக்கட்சியின் அமைச்சர்களில் ஒருவர் ஜெயிலில் உள்ளார்; மற்றொருவர் பெயிலில் உள்ளார். இவர்களைப் போலவே அனைவரும் ஊழல் செய்தவர்களாகவே உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.