உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்காக 4 உதவி பொறியாளர்கள்  நியமனம்

 ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்காக 4 உதவி பொறியாளர்கள்  நியமனம்

சென்னை: தமிழகத்தில், 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டப் பணிகளை செயல்படுத்துவதற்காக, நான்கு உதவி பொறியாளர்களை மின் வாரியம் நியமித்துள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில், ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்திற்கு, 'டெண்டர்' கோரப்பட்டது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், சமீபத்தில் அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. 'சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும், மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள 50 லட்சம் தொழில் மற்றும் வணிக நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்' என, தமிழக அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. அந்த மீட்டர்களை பொருத்தி, பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, மின் வாரியம் விரைவில் டெண்டர் கோர உள்ளது. தற்போது அத்திட்டப் பணிகளை மேற்கொள்ள, காஞ்சிபுரம், திருச்சி, நாகை மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் பணிபுரியும் நான்கு உதவி பொறியாளர் பணியிடங்களை, சென்னை தலைமை அலுவலக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு மாற்றி, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த பதவிகளில் நியமிக்கப்பட உள்ளவர்கள், ஸ்மார்ட் மீட்டர் தொடர்பான சமீபத்திய தொழில்நுட்பம், விலை உள்ளிட்ட விபரங்களை சேகரித்து, உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பர்; அதற்கு ஏற்ப டெண்டர் கோரப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ