சென்னை: அரசு விரைவு பஸ்களில், 90 நாட்களுக்கு முன்னரே, டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை நேற்று முதல் அமலானது. பொங்கல் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளதால், பயணியர் ஆர்வமாக முன்பதிவு செய்து வருகின்றனர்.தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருப்பதி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு, தினமும், 1,080க்கும் மேற்பட்ட டீலக்ஸ் மற்றும் 'ஏசி' வசதியுள்ள விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர். பயணம் செய்ய, 60 நாட்களுக்கு முன், முன்பதிவு செய்யலாம் என்பது, 90 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதுபற்றி, அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளின் போது, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். கடந்த பொங்கல் பண்டிகையின் போது, சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் வாயிலாக, 6.54 லட்சம் பேர் பயணம் செய்தனர். வரும் 2025 ஜனவரி, 14ல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் லட்சக்கணக்கானோர், சொந்த ஊருக்கு செல்வர். அரசு விரைவு பஸ்களில், முன்னர் இரு மாதங்களுக்கு முன் தான், முன்பதிவு செய்ய முடியும். தற்போது, 90 நாட்களுக்கு முன்னரே, முன்பதிவு செய்யும் வசதி நேற்று முதல் அமலானது. இதனால், பயணியர் முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க முடியும். கூடுதல் பஸ்களை இயக்க, நிர்வாகத்துக்கும் வசதியாக இருக்கும். முன்பதிவு நேற்று துவங்கிய நிலையில், தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணியர், ஆர்வமாக டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். வரும் ஜனவரி முதல் வாரத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கும் தேதி வெளியிடப்படும். நெரிசலை தவிர்க்க, அரசு போக்குவரத்து கழக www.tnstc.inஇணையதளம் அல்லது, டி.என்.எஸ்.டி.சி., செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.