| ADDED : டிச 22, 2025 06:12 PM
சென்னை: எஸ்ஐஆர் பணிக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும் எனக்கூறி 92, 626 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த அக்., 27ல் துவங்கியது. முதல் கட்டமாக, வீடு வீடாக எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் வழங்கப்பட்டு, வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனர்.எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்புக்கு பின், தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19 ம் தேதி வெளியிடப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.அதன் அடிப்படையில், தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், பெயர் சேர்ப்புக்கு படிவம் 6ஐ பூர்த்தி செய்து, ஓட்டுச்சாவடி அலுவலரிடம் வழங்கலாம். பெயர் சேர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவிப்போர், படிவம் 7, முகவரி மாற்றத்துக்கு படிவம் 8 ஆகியவற்றை வரும் ஜனவரி 18ம் தேதிக்குள் வழங்கலாம் எனவும் தேர்தல் கமிஷன் கூறியிருந்தது.இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 82, 626 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். கடந்த 3 நாட்களில் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று(டிச.,21) நடந்த சிறப்பு முகாமில் ஏராளமானோர் மனு அளித்துள்ளனர். அரசியல் கட்சிகள் சார்பில் கடந்த 19 ம் தேதி முதல் நேற்று வரை திமுக மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும் என இரண்டு விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பித்துள்ளது. பெயர் சேர்ப்புக்கு 6 மற்றும 6 ஏ படிவங்களை நிரப்பி 92, 626 பேர் மனு கொடுத்துள்ளனர். இதற்கு ஆட்சேபனை தெரிவித்து படிவம் 7 ஐ நிரப்பி 1007 பேர் மனு கொடுத்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளது. உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அவர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.