உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீர்ப்பு தள்ளிவைப்பு

தீர்ப்பு தள்ளிவைப்பு

வேட்பு மனுவில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தவறான தகவலை குறிப்பிட்டதாகக் கூறப்படும் புகாரில், வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதை எதிர்த்த மனு மீதான உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில், முன்னாள் முதல்வர் பழனிசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தாக்கல் செய்த வேட்புமனு மற்றும் பிரமாண பத்திரத்தில், சொத்து விபரங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்துள்ளதால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, சேலம் நீதிமன்றத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யவும், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், சேலம் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி மனு தாக்கல் செய்தார். மனுவில், 'வேட்பு மனுவில் தவறான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. மிலானி, எடப்பாடி தொகுதியைச் சேர்ந்தவர் அல்ல; தேர்தலில் போட்டியிடவும் இல்லை. இந்தப் புகார், விசாரணைக்கு ஏற்புடையதல்ல' என்று கூறப்பட்டது. இம்மனு, உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தை தீவிரப்படுத்த வேண்டாம் என, போலீஸ் தரப்புக்கு அறிவுறுத்தி இருந்தது.அதைத்தொடர்ந்து, மனு நீதிபதி வேல்முருகன் முன், விசாரணைக்கு வந்தது. பழனிசாமி தரப்பில், மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் வாதாடினார். போலீஸ் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் வினோத்குமார் வாதாடினார். இரு தரப்பு வாதங்களுக்குப் பின், மனுவின் உத்தரவை, நீதிபதி வேல்முருகன் தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை