பிரசார கூட்டத்தின் நடுவே ஆம்புலன்ஸ் டென்ஷனான அ.தி.மு.க., பழனிசாமி
அணைக்கட்டு:அணைக்கட்டில் நடந்த அ.தி.மு.க., பிரசார கூட்டத்தின் நடுவே, நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் சென்றதால், பழனிசாமி டென்ஷன் ஆனார். தமிழகம் முழுதும், 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி. நேற்று முன்தினம் இரவு வேலுார் மாவட்டம், அணைக்கட்டு பகுதிக்கு சென்ற அவர், கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசத் துவங்கினார். அப்போது, கூட்டத்தின் நடுவே ஒரு ஆம்புலன்ஸ் சென்றது. 'அதற்கு வழிவிடுங்கள்' என கட்சித் தொண்டர்கள் மற்றும் கூடியிருந்த பொதுமக்களிடம் மைக் மூலம் கேட்டுக் கொண்டார் பழனிசாமி. அப்போது தொண்டர்கள், 'ஆம்புலன்ஸில் நோயாளிகள் யாரும் இல்லை தலைவரே' என, குரல் கொடுத்தனர். உடனே டென்ஷனான பழனிசாமி, 'அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் யாரென பாருங்கள்; அவரை அப்படியே பிடித்து, போலீசிடம் ஒப்படைத்து புகார் அளியுங்கள்' என, கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பழனிசாமி பேசியதாவது: அ.தி.மு.க., நடத்தும் கூட்டங்களுக்கு நடுவே, நோயாளிகள் இல்லாத ஆம்புலன்ஸை அனுப்பி, குழப்பம் ஏற்படுத்துகின்றனர். கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு இப்படி தொல்லை கொடுப்பதன் வாயிலாக, மக்கள் அடுத்தடுத்த கூட்டங்களுக்கு வர மாட்டார்கள் என்ற கெட்ட எண்ணத்துடன், தி.மு.க.,வினர், திட்டமிட்டு நாம் நடத்தும் கூட்டங்களுக்கு நடுவே, வெற்று ஆம்புலன்சை அனுப்புகின்றனர். இதுவரை, 20க்கும் மேற்பட்ட கூட்டங்களுக்கு இப்படி ஆம்புலன்ஸ் அனுப்பி உள்ளனர். இதுதான், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருக்கு பாதுகாப்பு கொடுக்கும் லட்சணமா? கூட்டத்தின் நடுவே, வாகனம் செல்வதால், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி செய்யும்போது, பொதுமக்கள் பாதிப்படைவர் என்பதை நன்கு அறிந்தே இப்படி செய்கின்றனர். இதுபோன்று அடுத்து வரும் கூட்டங்களுக்கும், நோயாளிகள் இல்லாமல் ஆம்புலன்சை கூட்டத்தின் குறுக்கே விட்டால், அதன் டிரைவர் பேஷன்ட்டாக மாற்றப்பட்டு, அதே ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எல்லாரையும் துன்புறுத்தும் அரசாக, தி.மு.க., அரசு செயல்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை மிரட்டுவது அநாகரிக செயல்
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி எங்கு சென்றாலும், அங்கு ஆம்புலன்ஸ் வருவதாக சொல்கிறார். அவர் பிரதான சாலையில் தான் சுற்றுப்பயணம் செல்கிறார். மாநிலம் முழுதும், 1,330 ஆம்புலன்ஸ்கள் உயிர் காக்கும் சேவையை செய்து கொண்டிருக்கின்றன. எங்கேனும் விபத்து ஏற்பட்டால், எட்டு முதல் 10 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் சென்று உயிர்களை காக்க வேண்டும். தமிழகத்தில், '108' ஆம்புலன்ஸ் சேவையை அனைவரும் பாராட்டுகின்றனர். ஆம்புலன்ஸ் வரும் வழியில் கூட்டத்தை கூட்டிவிட்டு, அவர் போகும் வழியில் ஆம்புலன்சை வேண்டுமென்றே விடுவதாக, பழனிசாமி புகார் சொல்கிறார். அதுமட்டுமல்ல, 'ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பெயரை, 'நோட்' பண்ணுங்கள்; ஆம்புலன்ஸ் டிரைவரே ஆம்புலன்சில் செல்லும் நிலை ஏற்படும்' என, மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இதனால், மருத்துவ பணியாளர்கள் அச்சத்தில் உள்ளனர். இப்படி பேசுவது அநாகரிகம். இதுபோன்று பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். சுப்பிரமணியன், சுகாதார துறை அமைச்சர்
பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்
வேலுார் மாவட்டம், அணைக்கட்டு மருத்துவமனையில் இருந்து நோயாளியை அழைத்து வருவதற்காக, '108' ஆம்புலன்ஸ் சென்றது. அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரை வழிமறித்து அவமதித்து, அவரை மிரட்டும் வகையில் பேசிய, அ.தி.மு.க., பொதுச்செயலரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமியை கண்டிக்கிறோம். நேரம், காலம் பார்க்காமல், அவசரத்திற்கு அழைத்த உடன் ஓடிச்சென்று, உயிர்களை காப்பது தான் எங்கள் பணி. அப்படி நாங்கள் செய்யும் பணியை மதித்து, எங்களை பாராட்டாவிட்டாலும், இப்படி அவமதித்து மிரட்டுவதை, எங்களால் ஏற்க முடியாது. உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு, அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேசியதற்கு, பழனிசாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்க தவறும்பட்சத்தில், அவருக்கு எதராக, தமிழகம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம். பிவின், தலைவர், தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம்
அன்று விஜயகாந்த்; இன்று பழனிசாமி
நடிகராக இருந்த விஜயகாந்த், தே.மு.தி.க.,வை துவக்கி, 2006ல் தேர்தலை சந்தித்தார். அந்த தேர்தலில், தே.மு.தி.க., சார்பில் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தொடர்ந்து, 2011 தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, விஜயகாந்த் போட்டியிட்டார். முன்னதாக, விஜயகாந்த் எங்கெல்லாம் பிரசாரத்துக்கு சென்றாரோ, அங்கெல்லாம் மின் தடை ஏற்படுத்தப்பட்டது. இருந்தாலும், பிரசார வாகனத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மைக் வாயிலாக, மக்கள் மத்தியில் பேசியபடியே சென்றார் விஜயகாந்த். இன்று அதே பணியில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பிரசாரம் செய்யும் இடங்களுக்கு ஆம்புலன்சை அனுப்பி, தி.மு.க., அரசு இடைஞ்சல் செய்கிறது என, அ.தி.மு.க.,வினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.