உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விபத்து பைக்கில் சென்றவர் பரிதாப பலி

மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விபத்து பைக்கில் சென்றவர் பரிதாப பலி

சென்னை: சென்னையில் இரண்டாவது கட்டத்தில், மொத்தமுள்ள மூன்று வழித்தடங்களில் சோழிங்கநல்லுார் - மாதவரம் வழித்தடத்தில் 44.6 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இந்த தடத்தில், பெரும்பாலாலும் மேம்பால பாதை வழியாக அமைகிறது. பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள 500க்கும் மேற்பட்ட துாண்களில், மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.இந்த வழித்தடத்தில், போரூரில் இருந்து நந்தம்பாக்கம் பகுதி வரை மெட்ரோ ரயில்வே மேம்பாலத்தின் கீழ், 30 அடி உயரத்தில் வாகனங்கள் செல்லும் வகையில், மாநில நெடுஞ்சாலைத்துறை இணைப்பு பாலம் அமைக்கும் பணிகளும் சேர்ந்து நடந்து வருகின்றன.இதற்காக, இரண்டு துாண்கள் மத்தியில் 'கர்டர்' எனப்படும், ராட்சத கான்கிரீட் பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான, பணிகளை எல் அண்டு டி., நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், ராமாபுரம், எல் அண்ட் டி., நிறுவனம் அருகே, மெட்ரோ ரயில் மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் வாகனங்கள் மேம்பாலத்தில், நேற்று முன்தினம் இரவு, 40 அடி நீளமுள்ள 'கர்டர்' பொருத்தப்பட இருந்தது. அப்போது, இரவு 9:00 மணியளவில் கார்டர் திடீரென சரிந்து சாலையில் விழுந்தது.அப்போது, பரங்கிமலையில் இருந்து போரூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற, நாகர்கோவிலை சேர்ந்த ரமேஷ், 47, என்பவர், கான்கிரீட் பாலத்தில் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இவர், பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர். சூளைமேட்டில் உள்ள தனியார் பில்லிங் மஷின் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். பணி முடித்து வீட்டிற்கு திரும்பும் வழியில், கார்டர் விழுந்ததில், அதன் அடியில் சிக்கி இறந்துள்ளார்.

விபத்து காரணமாக நேற்று முன்தினம் இரவு பரங்கிமலை- -- பூந்தமல்லி சாலையில் மாற்று பாதையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. கீழே விழுந்த கர்டர், ராட்சத கிரேன் வாயிலாக அகற்றும் பணிகள் உடனடியாக துவங்கியது. அதிகாலை 2:00 மணி வரை கர்டரை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்தது.ஐந்து மணிநேர போராட்டத்திற்கு பின், கர்டர் அகற்றப்பட்டு, அதன் அடியில் சிக்கியிருந்த ரமேஷின் உடல் மீட்கப்பட்டது. சம்பவ இடத்தில், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.கர்டர் அகற்றப்பட்ட பின், சேதடைந்திருந்த சாலை உடனடியாக செப்பனிடப்பட்டது. நேற்று காலை முதல் அவ்வழியே இலகுரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. பின், காலை 11:00 மணிக்கு பின் அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்பட்டன. இந்த கர்டர் விழுந்ததில், சாலையில் புதைக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. சிறிது சிறிதாக வெளியேறி தண்ணீர், பரங்கிமலை - பூந்தமல்லி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு, குழாய் உடைந்த பகுதியை சீரமைக்கும் பணியில், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

எல் அண்டு டி., நிறுவனம்

ரூ.20 லட்சம் நிதியுதவிமாதவரம் - சோழிங்கநல்லுார் மெட்ரோ ரயில் தடத்தில், கோயம்பேடு முதல் உள்ளகரம் வரை 12 கி.மீ., துாரத்திற்கு, மெட்ரோ ரயில் மேம்பால பணிகளை எல் அண்ட் டி., நிறுவனம் 1,800 கோடி ரூபாயில் மேற்கொண்டு வருகிறது. விபத்து குறித்து, போலீசார் மற்றும் மெட்ரோ நிறுவனம் சார்பில் விசாரணை நடக்கிறது. அடுத்த நான்கு நாட்களில் இறுதி அறிக்கை கிடைக்கும். அதை பொறுத்த, ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதற்கிடையே, கர்டர் சரிந்து இறந்த ரமேஷின் குடும்பத்துக்கு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் எல் அண்ட் டி., நிறுவனம் சார்பில் 20 லட்சம் ரூபாய் இழப்பீடு அறவிக்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்ட இடத்தில், மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை நேரில் ஆய்வு செய்தனர்.

பின், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குனர் அர்ச்சுனன் அளித்த பேட்டி:மெட்ரோ பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் நெடுஞ்சாலை துறை மேம்பாலத்திற்காக, கர்டர் பொருத்தப்பட்டு நீண்ட நாட்கள் ஆகிறது. அதை தாங்கிப்பிடிக்கும் வகையில், பக்க பலமாக 'ஏ' வடிவ உலோக உபகரணம் பொருத்தப்பட்டிருந்தது. இவ்வாறு பொருத்தப்பட்டிருந்த உலோக உபகரணத்தில், வெல்டிங்கில் உடைப்பு ஏற்பட்டு, அது வலுவிழந்து, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.இந்த விபத்திற்கு காரணம் உலோகம் உறுதித் தன்மையை இழந்தது தான். இப்பிரச்னை துல்லியமாக கண்டறிந்ததை தொடர்ந்து, உலோக இணைப்பு மற்றும் பாலத்தின் உறுதித்தன்மையில் வேறு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் உள்ள 1000க்கும் மேற்பட்ட கர்டர் எனப்படும், கான்கிரீட் பாலங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அனைத்து இணைப்புகளிலும் உறுதி தன்மையை உறுதி செய்யும் வகையில், வலுவை அதிகரிக்கும் பணிகளை துவக்கியுள்ளோம். எனவே, இனி இது போன்ற விபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை. இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் மற்றும் காவல்துறை தரப்பில் தனித்தனியே விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக துறையை சேர்ந்த ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

பாலம் அருகே வாகனங்களை

அனுமதித்ததால் விபத்து?ராமாபுரத்தில் சாலையின் மேற்பகுதியில் மெட்ரோ ரயில் மேம்பால பணி முடிந்தாலும், விபத்துகளை தடுக்கும் வகையில், அதை சுற்றி 10 அடி வரை தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. போக்குவரத்து நெரிசல் தொடர்ந்ததால், சில தினங்களுக்கு முன் 5 அடி துாரம் குறைத்து, வாகனங்களுக்கு கூடுதல் இடம் ஏற்படுத்தப்பட்டது. சாலை இடைவெளியை அதிகரித்து, பாலத்துக்கு அருகிலேயே வாகனங்கள் செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. இந்த நடவடிகையும் விபத்தில் உயிரிழப்புக்கு காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ