வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மாட்டுக்கு ஆகாது மீண் கோழிக்கு சரி
தேனி:தேனியை சேர்ந்த 2 பொறியியல் பட்டதாரி சகோதரர்கள் நகராட்சியில் சேகரமாகும் மக்கும் குப்பையை புழுக்களின் உதவியுடன் உரமாகவும், அப்புழுக்களை சுத்திகரித்து காயவைத்து கால்நடை உணவாகவும் மாற்றி விற்பனை செய்து கவனம் ஈர்த்து வருகின்றனர்.தேனி பொம்மையகவுண்டன்பட்டி பொறியியல் பட்டதாரி சகோதரர்கள் நரேஷ்குமார் 30, உதயா 24. இதில் உதயா குப்பை மேலாண்மை குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். இவர்கள் தேனி அல்லிநகரம் நகராட்சியுடன் இணைந்து சேகரமாகும் மக்கும் குப்பையை 7 நாட்களில் Block solider fly என்ற ஈ வகை புழுக்களை பயன்படுத்தி உரமாகவும், அப்புழுக்களை மீன்கள், கோழிகளுக்கு தீவனமாகவும் தயாரித்து, நகராட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.சகோதரர்கள் கூறியதாவது: மக்கும் குப்பை அரைத்து கொட்டப்படும் தொட்டிகளில் ஈக்களின் லார்வாக்களை விடுகிறோம். இவை 5 முதல் 7 நாட்கள் தொட்டிகளில் வசித்து குப்பையை உணவாக எடுத்துக் கொள்கின்றன. ஒரு டன் மக்கும் குப்பையை உரமாக மாற்றும் போது 40 கிராம் புழுக்கள் விடப்படும். அவை ஏழு நாட்களில் 200 கிலோ புழுக்களாக வளரும்.இதன் எச்சம் நல்ல உரமாக மாறுகிறது. ஏழு நாட்களில் உரம் தயாராகிறது. இதன் பின் புழுக்களை உரக்குழியில் இருந்து பிரித்து எடுக்கிறோம். எடுக்கப்பட்ட புழுக்களில் 5 சதவீதத்தை புழுக்கள் உற்பத்திக்கு பயன்படுத்துகிறோம். மீதமுள்ளவற்றை சுத்தம் செய்து சோலார் டிரையர், அவென் மூலம் உலர்த்துகிறோம். இப்புழுக்களில் அதிக அளவில் புரோட்டீன் சத்து உள்ளது.இதனால் கோழிப் பண்ணைகள், மீன் வளர்ப்பு, பறவைகள் வளர்ப்பவர்கள் தீவனமாக வாங்கிச் செல்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் இந்த தீவனத்தை வெளி மாவட்டங்களில் விற்பனை செய்கிறோம். பிப்.,ல் சோதனை முயற்சியாக செய்த போது, வெற்றி கிடைத்தது. தினமும் 2 டன் மக்கும் குப்பையை உரமாக மாற்ற முயற்சித்து வருகிறோம். காய்ந்த புழுக்கள் கிலோ ரூ. 150 முதல் ரூ.ஆயிரம் வரை விற்பனை செய்கிறோம்.புழுக்கள் குப்பையை உரமாக மாற்றும் போது 40 முதல் 50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை வெளியிடும் என்பதால் பழ ஈக்கள் தொட்டிகளில் சுற்றி இருக்காது. மேலும் துர்நாற்றம் வீசாது. சாதாரணமாக தயாரிக்கப்படும் உரத்தினை விட புழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் உரத்தில் ஆர்கானிக், நைட்ரஜன் சத்து அதிகம் உள்ளது என்றனர்.
மாட்டுக்கு ஆகாது மீண் கோழிக்கு சரி