UPDATED : மார் 13, 2024 02:14 AM | ADDED : மார் 12, 2024 11:14 PM
மதுரை : போலி ஆவணம் மூலம் உயர்நீதிமன்றத்தில் சாதகமான உத்தரவு பெற்றதாக நடிகர் தனுஷூக்கு எதிராக தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.மாவட்டம் மேலுார் கதிரேசன். இவர்,'நடிகர் தனுஷ் என் மகன். அவர், எனக்கு பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும்,' என மேலுார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை எதிர்த்து தனுஷ் மனு செய்ததன் பேரில் உயர்நீதிமன்றக் கிளை மேலுார் நீதிமன்ற வழக்கை ரத்து செய்தது.போலி ஆவணங்களை தாக்கல் செய்து உயர்நீதிமன்றத்தில் அவருக்கு சாதகமாக உத்தரவு பெற்றார். அவருக்கு எதிராக மதுரை புதுார் போலீசில் புகார் அளித்தேன். தனுஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்,' என மதுரை நீதித்துறை நடுவர் (ஜெ.எம்.,6) நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் கதிரேசன் மனு செய்தார்.ஏற்கனவே விசாரணையின்போது மனுதாரர் தரப்பு: தனுஷ் இயக்குனர் கஸ்துாரிராஜாவின் மகன் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. கீழமை நீதிமன்றம் சரியாக பரிசீலிக்கவில்லை.தனுஷ் தரப்பு: உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனுதாரர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனுதாரர் எஸ்.பி.,உள்ளிட்ட உயரதிகாரிகளிடம் புகார் அளிக்கவில்லை. தனுஷின் பிறப்பு, கல்வி உள்ளிட்ட இதர சான்றுகள் குறித்து கேள்வி எழுப்ப மனுதாரருக்கு முகாந்திரம் இல்லை. கீழமை நீதிமன்றம் சரியாக பரிசீலித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இம்மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.தீர்ப்பை ஒத்திவைத்த நிலையில் நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் நேற்று பிறப்பித்த உத்தரவு: தவறான உள்நோக்கில் மனுதாரர் இம்மனுவை தாக்கல் செய்ததோடு மட்டுமன்றி, குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கத் தகுந்த எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை. இது ஒரு அற்பத்தனமான வழக்கு. தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.