தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்பை எதிர்த்து வழக்கு
சென்னை:தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலர் விஷால் உள்ளிட்டோர் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சட்ட விதிகளின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, 2022ம் ஆண்டு நடந்த தேர்தலில், தலைவராக நடிகர் நாசர், பொதுச்செயலராக நடிகர் விஷால், பொருளாளராக நடிகர் கார்த்தி, துணைத்தலைவர்களாக பூச்சி முருகன், நடிகர் கருணாஸ் உள்ளிட்டோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.இந்த நிர்வாகிகளின் பதவிக்காலம், கடந்த மார்ச் 19ல் முடிந்து விட்டது. கடந்த ஆண்டு செப்., 8ம் தேதி நடந்த, நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடந்து வருவதால், நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த தீர்மானத்தை செல்லாது, சட்ட விரோதமானது என அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சாலிகிராமத்தைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மனு விபரம்:கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கான அழைப்பிதழில், நிர்வாகிகளின் பதவிக்காலத்தை, மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது குறித்து, எந்த குறிப்பும் இடம் பெறவில்லை.நடிகர் சங்க கட்டடப் பணிகளை குறிப்பிட்டு, பதவிக்காலத்தை நீட்டிக்க முடியாது. பதவிக் காலத்தை நீட்டித்தது, சங்கத்தின் சட்ட விதிகளுக்கும், தமிழக சங்கங்கள் பதிவு சட்டத்திற்கும் விரோதமானது. எனவே, நிர்வாகிகளின் பதவிக்காலத்தை நீட்டித்து, நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செல்லாது என, அறிவிக்க வேண்டும்.உயர் நீதிமன்ற நீதிபதியை ஆணையராக நியமித்து, தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். தேர்தல் நடத்தும் வரை, தற்போதைய நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உள்ளிட்ட நிர்வாகிகள், எந்த முடிவும் எடுக்க தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு, தென்னிந்திய நடிகர் சங்கம், அதன் தலைவர் நாசர், பொதுச்செயலர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர், ஜூன் 4ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.