விரைவில் மழை நிவாரணம் முதல்வர் ஸ்டாலின் உறுதி
விழுப்புரம், விழுப்புரத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய பின், முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்திற்கு, 407 வீரர்கள் உள்ள ஏழு தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்களும், எட்டு மாநில பேரிடர் மேலாண்மை குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. கடலுார் மாவட்டத்திற்கு இரு குழுக்களும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஒரு குழுவும் அனுப்பப்பட்டுள்ளன. இவர்களோடு தீயணைப்பு வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் - 180, கடலுார் - 247, திருவண்ணாமலை - 210 என மொத்தம், 637 தீயணைப்பு அலுவலர்கள், பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பாதுகாப்பாக மக்களை தங்க வைக்க, 174 நிவாரண மையங்கள் செயல்படுகின்றன; 7,876 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மின் தடையை சரிசெய்ய, 900 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் தேங்கிய இடங்களில் மின்சாரம் தர முடியாத சூழல் உள்ளது.விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதன்படி, 1 லட்சத்து, 29,000 ஹெக்டேர் சேதம் ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரம் பெறப்பட்டுள்ளது.மழை முழுதுமாக நின்று, தேங்கிய நீர் வடிந்த பின், முழுமையான கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.பாதிக்கப்பட்ட மக்களை உடனே மீட்டு, இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வரும் பணிகளை செய்ய, அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளேன். புயல் பாதிப்பால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான அறிக்கை, விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். மழை சேதங்களை பார்வையிட உடனே குழுவை அனுப்பி வைப்பதற்கான கோரிக்கைகளை, தமிழக அரசு சார்பில் வைக்க உள்ளோம்.இவ்வாறு முதல்வர் கூறினார்.