மதுரை: வரும் 2026ல், முதல்வர் ஸ்டாலினுக்கு 'எதிர்க்கட்சித் தலைவர்' பதவியை பரிசளிக்க தயாராக இருப்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலர் ஜெயராஜராஜேஸ்வரன் கூறினர்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலர் ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர் அளித்த பேட்டி: கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது, 'புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்' என, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் ஆகியும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை, 25 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்தனர். பல துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல், இளைஞர்களின் அரசுப் பணி கனவை முடக்கினர்.ஆட்சியில் வைத்து அழகு பார்த்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் உரிமைகளை பறித்தது தான் தி.மு.க., அரசின் மூன்றாண்டு கால சாதனையாக உள்ளது.கடந்த ஆறு மாதத்திற்கு முன் திருமண நிகழ்வொன்றில், தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அதைக் கண்டித்து, மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.பள்ளிக் கல்வித்துறை ஆய்வு கூட்டத்தில் நிதிசாரா கோரிக்கைகளை நிறைவேற்ற மட்டுமே முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும், புதிய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளதன் வாயிலாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு துரோகம் இழைத்துள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சி.பி.எஸ்., சந்தா தொகை, தமிழக அரசால் தவறுதலாக கையாளப்பட்டுள்ளது. இதனால், ஓய்வூதியப் பலன்கள் கிடைக்காமல் போக்குவரத்துத் துறை ஊழியர்களின் நிலைமை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் வரவுள்ளது.எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசுவார் எனில், அவர் விரும்பும் எதிர்கட்சித் தலைவர் பதவியை, 2026ல் பரிசளிக்க தயாராக இருக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.