மீனவர்கள் கைது மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
சென்னை:'இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுப்பதுடன், மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும்' என, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, மீன்பிடிக்க சென்ற மூன்று மீனவர்களை, இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதுடன், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வேண்டும்.இலங்கை கடற்படையினரால், அடிக்கடி இதுபோன்று சிறைபிடிக்கப்படுவதால், அவர்களின் குடும்பத்தினர் வறுமையின் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இலங்கை சிறையில், 110 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிப்பதுடன், இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க, வலுவான துாதரக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.