| ADDED : செப் 07, 2025 01:31 AM
சென்னை:லண்டன் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு அம்பேத்கர் தங்கியிருந்து படித்த இல்லத்தை பார்வையிட்டார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள பதிவு: லண்டன் பொருளியல் பள்ளியில் படிக்கும்போது, அம்பேத்கர் தங்கியிருந்த இல்லத்தை பார்வையிடும் வாய்ப்பை பெற்றேன். டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இல்லத்தின் அறைகளில் நடந்து செல்கையில், பெரும் வியப்பு என்னுள் மேலோங்கியது. இந்தியாவில் ஜாதியின் பெயரில் ஒடுக்கப்பட்ட ஓர் இளைஞன், இங்குதான் தன் அறிவால் வளர்ந்து, லண்டனில் அனைவரது மரியாதையையும் பெற்று, பின்னர் இந்தியாவின் அரசியலமைப்பையே வடித்துத் தரும் நிலைக்கு உயர்ந்தார். ஈ.வெ.ரா.,வும், அம்பேத்கரும் உரையாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத்தை, அங்கு கண்டது மிகவும் சிலிர்ப்பூட்டியது. இப்படியொரு உணர்வெழுச்சி மிகுந்த தருணம் வாய்க்கப் பெற்றதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.