| ADDED : நவ 03, 2025 01:36 PM
கோவை:
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட
சம்பவத்திற்கு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு
செய்துள்ளனர்.கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி ஒருவர், 3
பேர் கொண்ட கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு, கூட்டு பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பேரதிரிச்சியை இந்த சம்பவம் தொடர்பாக
போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த
நிலையில், திமுக ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு
இல்லை என்று அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இபிஎஸ்
வெளியிட்ட அறிக்கை; தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா? என்ற
கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி
புதைத்துவிட்ட திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். அதிமுக ஆட்சியில்
இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த மாநிலங்களில் முதன்மை
மாநிலமாக தமிழகம் விளங்கியது. திமுக அரசு பெண்களை பாதுகாக்கும்
என்று நம்ப வேண்டாம் என்று சில மாதங்களுக்கு முன்பு அதிமுக சார்பில்
கண்களில் பெப்பர் ஸ்பிரே அடிக்கும் கருவி, டார்ச், உள்ளிட்ட பாதுகாப்பு
பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை பெண்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை நான்
சென்னையில் தலைமைக் கழகத்தில் துவக்கி வைத்தேன். திமுக ஆட்சியில்,
தமிழகத்தில் பெண்கள் தங்களுக்கு தாங்களே பாதுகாப்பை உருவாக்கிக்கொள்ள
வேண்டும்.கோவை விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவிக்கு பாலியல்
வன்கொடுமை செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை உடனடியாக கண்டுபிடித்து,
சட்டத்தின் பிடியில் நிறுத்தி, கடும் தண்டனை வாங்கித்தர காவல்துறைக்கு
பொறுப்பு வகிக்கும் பொம்மை முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன், இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார். அன்புமணி அறிக்கை; கோவையில் கல்லூரி மாணவி
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது: திமுக ஆட்சியில்
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதையே இது
காட்டுகிறது.தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாலியல்
வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.தமிழகத்தில் 2024ம் ஆண்டில் பதிவு
செய்யப்பட்ட போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 6975 ஆக அதிகரித்திருக்கிறது.
2023ம் ஆண்டு இதே சட்டத்தின்கீழ் பதிவான 4581 வழக்குகளுடன் ஒப்பிடும் போது
இது 2394, அதாவது 52.30% அதிகம் ஆகும். இதற்கு தமிழக அரசும்,
காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும்.தமிழகம் முழுவதும் கஞ்சா
உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனை கட்டுக்கடங்காத அளவுக்கு
பெருகியிருப்பது தான் இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் ஆகும்.
போதைப் பொருள்களின் நடமாட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று தொடர்ந்து
வலியுறுத்தி வந்த போதிலும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,
எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழிசை அறிக்கை: தமிழகத்தை தலைகுனிய
விடமாட்டோம் என்று விளம்பரத்திற்கு சொல்லிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் அரசு
இன்று தமிழகத்தை தலைகுனிய வைத்திருக்கிறது. ஆட்சியாளர்கள் ஒவ்வொருவரும்
வெட்கப்பட வேண்டிய சம்பவம் கோவையில் விமான நிலையம் பின்புறம் கொடூரமாக
நடந்தேறி இருக்கிறது. ஒரு மாணவிக்கு ஏற்பட்ட கொடூரம் மனதை நடுநடுங்க
வைத்துக் கொண்டிருக்கிறது.திமுக ஆட்சியில் ஆட்சியில் திமுக
பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பது மறுபடியும் மனக்கலக்கத்தோடு உறுதி
செய்யப்பட்டு இருக்கிறது. கல்லூரி வளாகங்கள் தொடங்கி சாலைகள் வரை பெண்கள்
பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பெண்கள் வாழுகின்ற சூழ்நிலை மிக மிக அதிர்ச்சி
அளிக்கிறது. தலைகுனிய விடமாட்டோம் தலைகுனிய விடமாட்டோம் என்று சொல்லும்
முதல்வர் ஸ்டாலின் பெண்கள் வெளியிலேயே தலை காட்ட முடியாத ஒரு இருண்ட
ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது மிக மிக வேதனை. பாதிக்கப்பட்ட
பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்.தமிழ்நாட்டில் பெண்களின்
பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட
வேண்டும். தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பின்மை பற்றியும், அதனால் அவர்கள்
பாதிக்கப்படுவதை பற்றியும் அடிக்கடி பதிவிடும் நிலைமை வருவதை நினைத்து
வேதனை அடைகிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.