உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆணவ படுகொலை தடுப்பு சட்டம் இயற்ற நீதிபதி பாஷா தலைமையில் ஆணையம்

ஆணவ படுகொலை தடுப்பு சட்டம் இயற்ற நீதிபதி பாஷா தலைமையில் ஆணையம்

சென்னை:“ஆணவப் படுகொலைகளை தடுக்கும் நோக்கில், உரிய சட்டம் இயற்ற, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும்,” என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சட்டசபையில் அவர் பேசியதாவது: 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரும், 'ஜாதியிரண்டொழிய வேறில்லை, இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்' என்ற அவ்வையாரும் பிறந்த மண் தமிழகம். இதுதான் தமிழர் போற்றி வந்த பண்பாடு. ஆனால், இடைக் காலத்தில் புகுந்தவர் களால், தொழில் வேற்றுமை, ஜாதி வேற்றுமையாக மாற்றப்பட்டது. அப்போதே ஒற்றுமைக்கான குரல்களும் தமிழ் மண்ணில் உரக்க ஒலித்துள்ளன. பல சீர்திருத்த கருத்துகள் இயக்கமாகவே உருவெடுத்துள்ளன. இனம், மொழியை நம் அடையாளங்களாக சீர்திரு த்த இயக்கங்கள் மாற்றின. சமத்துவத்தை உண்டாக்க, அனைத்து ஜாதியினரையும அர்ச்சகர் ஆக்கி னோம். தீண்டாமையின் குறியீடான, 'காலனி' என்ற சொல்லை நீக்குவோம் என்று அறிவித்தோம். பள்ளி, கல்லுாரி விடுதி களுக்கு, 'சமூக நீதி விடுதி' என பெயர் மாற்றினோம் . சமீபத்தில் பிரதமரை நேரில் சந்தித்து, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பட்டியலில் உள்ள ஜாதி பெயரில், இறுதி எழுத்தில் முடிவடையும், 'ன்' என்பதற்கு பதிலாக, 'ர்' என விகுதி மாற்றம் செய்து, சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.

தடுக்க வேண்டும்

சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், பொதுவுடமை, பொது உரிமை, கல்வி உரிமை, அதிகார உரிமை போன்ற கொள்கைகள் தான் வேற்றுமையை, பகைமையை விரட்டும். அதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம். இதன் வாயிலாகவே சமத்துவம் உடைய சமுதாயத்தை உருவாக்க முடியும். இத்தகைய சூழலில், நாட்டில் நடக்கும் சில சம்பவங்கள் வேதனை அளிக்கின்றன. உலகம் முழுக்க பரவி, அறிவால் மதிக்கப்பட்டு வரும் நம் தமிழ்ச் சமுதாயம், உள்ளூரில் சண்டை போட்டுக்கொள்வது என்ன நியாயம் என்பது தான், நம்மை வருத்தும் கேள்வி. எதன் காரணமாகவும் ஒருவர் மற்றவரை கொல்வது, நாகரிக சமுதாயத்தால் ஏற்க இயலாதது. அவ்வப்போது ஏதேனும் ஒரு பகுதியில் நடந்துவிடும் ஒரு துயரமான சம்பவம், நம் நெஞ்சை உலுக்கி விடுகிறது. நம் சமுதாயத்தையே தலைகுனியச் செய்து விடுகிறது. பெண்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கையை, தாங்களே தீர்மானிக்கும் உரிமையை பறிக்கும் ஆணாதிக்கமும், இதன் பின்னால் ஒளிந்திருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, சமுதாய மாற்றத்தையும் ஏற்படுத்தி, இந்த அநீதியை தடுக்க வேண்டும். யாரும், எதன் பொருட்டும், செய்த குற்றத்தில் இருந்து தண்டனை இல்லாமல் தப்பிவிடக்கூடாது என, காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளோம். சட்டம் அதன் கடமையைச் செய்கிறது. இக்கொடூரமான சிந்தனைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை, சமூக சீர்திருத்த இயக்கங்கள் மட்டுமல்ல, அரசியல் இயக்கங்களும், பொதுநல அமைப்புகளும் செய்ய வேண்டும்.

சட்டம் இயற்றப்படும்

நாகரிக சமுதாயத்தின் அடையாளம் என்பது, பொருளாதார மேம்பாடு மட்டுமல்ல, சமூகச் சிந்தனையின் மேம்பாடு என்பதை உணர்த்த வேண்டும். சமுதாயத்தில் ஜாதி வேற்றுமைக்கு எதிராக, ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராக அனைவரும் பேச வேண்டும். அனைத்து விதமான ஆதிக்க மனப்பான்மைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆதிக்க எதிர்ப்பும், சமத்துவ சிந்தனையும் உடைய சுயமரியாதையும், அன்பும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்குவதற்கான பிரசாரத்தை, ஓர் இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டியது, நம் அனைவரின் கடமை. சீர்திருத்த பரப்புரையும், குற்றத்திற்கான தண்டனையும், வாளும் கேடயமுமாக முன்னெடுக்கப்பட வேண்டும். இது குறித்து, தேவையான பரிந்துரைகளை அளிப்பதற்காக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் சட்ட வல்லுநர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்களைக் கொண்ட ஒரு ஆணையம் அமைக்கப்படும். அரசியல் இயக்கங்கள், சட்ட வல்லுநர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என, அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் பெற்று, இந்த ஆணையம் பரிந்துரைகள் வழங்கும். அதன் அடிப்படையில், ஆணவப் படுகொலைகளை தடுக்கும் நோக்கில், உரிய சட்டம் இயற்ற தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும் என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். ஜாதி மட்டும் காரணமல்ல! ஆணவப் படுகொலை நடந்த போது, அது தொடர்பான வழக்குகளில் கடுமையான பிரிவுகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இப்படுகொலைகளுக்கு ஜாதி மட்டுமே காரணமல்ல; இன்னும் பல காரணங்களும் இருக்கின்றன. எதன்பொருட்டு நடந்தாலும் கொலை, கொலை தான். அதற்கான தண்டனை கடுமையாகவே தரப்பட்டுள்ளது ஸ்டாலின், முதல்வர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை