வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் என டி.ஜி.பி.,க்கு புகார் கடிதம்
சென்னை:கோவில் காவலாளி அஜித்குமார், 27, கொலை வழக்கில், சாட்சிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு கேட்டும், அஜித்குமாரை போலீசார் அடித்ததை, 'வீடியோ' எடுத்த வாலிபர், டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து, அவருக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐந்து பேர் கைது
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமாரை, நகை, பணம் திருட்டு தொடர்பாக விசாரிக்கும் போது, தனிப்படை போலீசார் அடித்துக் கொன்றனர். இந்த கொலை வழக்கில், போலீசார் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அஜித்குமாரை தனிப்படை போலீசார் அடித்து சித்ரவதை செய்ததை, மடப்புரத்தைச் சேர்ந்த கோவில் ஊழியர் சக்தீஸ்வரன், 34, கழிப்பறை ஜன்னல் வழியாக, 'வீடியோ' எடுத்துள்ளார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக, இந்த வீடியோ சேர்க்கப்பட்டுள்ளது. சக்தீஸ்வரன் உள்ளிட்ட நான்கு சாட்சிகளின் வாக்குமூலங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்நிலையில், சாட்சிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு சக்தீஸ்வரன் கடிதம் அனுப்பினார். அதில், அவர் கூறியிருந்ததாவது: நான் மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளி அம்மன் கோவிலில், இரண்டரை ஆண்டுகளாக ஊழியராக பணியாற்றி வருகிறேன். மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில், நேரடி சாட்சியாவேன். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, நீதிபதிகளிடம் சாட்சியம் அளித்துள்ளேன். எனக்கும், மற்ற சாட்சிகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கில் கைதாகி உள்ள தனிப்படை போலீஸ்காரர் ராஜா, ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி உடையவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்துள்ளார். அவர்களை பயன்படுத்தும் நபராகவும் உள்ளார். சித்ரவதை
ஜூன் 28ம் தேதி காலை, ராஜாவை நான் சந்தித்தபோது, என்னை கடுமையாக மிரட்டினார். நான் தான் அஜித்குமாரை அடித்து சித்ரவதை செய்ததை வீடியோ எடுத்தேன். அந்த வீடியோவை நீதிமன்றத்தில் ஒப்படைத்ததால், எனக்கும், என்னை சார்ந்தவர்களின் உயிர், உடைமைகளுக்கும் அச்சுறுத்தல்கள் வருகின்றன. மற்ற சாட்சியினரின் உயிருக்கும் அச்சுறுத்தல்கள் உள்ளன.நீதிமன்ற உத்தரவின்படி, எனக்கும், மற்ற சாட்சியினருக்கும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அவசியமாகிறது. திருப்புவனம் அல்லாத, பிற மாவட்டங்களைச் சேர்ந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார். இதையடுத்து, வீடியோ எடுத்தவரும், முக்கிய சாட்சியுமான சக்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின்படி, ராமநாதபுரத்தில் இருந்து ஆயுதப்படை காவலர்கள் இரண்டு பேர், 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மற்ற சாட்சிகளுக்கும் துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.'பார்த்து இருந்துக்க தம்பி'
மிரட்டும் ரவுடிகள்
சக்தீஸ்வரன் கூறியதாவது:கோவில் காவலாளி அஜித்குமாரை, தனிப்படை போலீசார் சூழ்ந்து அடித்த போது, அதை கோவில் கழிப்பறையில் இருந்து வீடியோ எடுத்தேன். சம்பவம் நடந்த போது, நான் அங்கு இருந்தேன். நடந்த சம்பவம் அனைத்தையும் நீதிபதியிடம் கூறி உள்ளேன். இந்நிலையில், குற்றப்பின்னணி உள்ளவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள், என்னை பற்றி தவறான தகவல்களை பரப்புகின்றனர். அவர்களின் பெயரை சொல்ல விரும்பவில்லை. அஜித்குமாரை நாங்கள் தான் அடித்து அழைத்துச் சென்று, போலீசாரிடம் ஒப்படைத்ததாக கூறுகின்றனர். இது முற்றிலும் பொய். சம்பவத்தை திசை திருப்பும் முயற்சி. எங்களின் விரல் நுனி கூட, அஜித்குமாரின் உடலில் படவில்லை. நாங்கள் அடித்தோம் என, திட்டமிட்டு பொய் தகவல்களை பரப்புகின்றனர். அப்படி நான் அடித்து இருந்தால், நான் ஏன் வீடியோ எடுக்கப் போகிறேன்? முழு விசாரணையில் உண்மை தெரியவரும். அஜித்குமார் கொலை வழக்கில் கைதாகி உள்ள, தனிப்படை போலீஸ்காரர் ராஜாவின் மொபைல் போன் தொடர்புகளை ஆய்வு செய்தாலே, அவர் எப்படிபட்ட நபர் என, தெரிந்து விடும். ரவுடிகள் மற்றும் குற்றப்பின்னணி உடைய நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.ராஜாவுக்கு வலதுகரமாக செயல்படும் ரவுடிகள் தான், 'பார்த்து இருந்துக்க தம்பி' என, மிரட்டுகின்றனர். நான் சாட்சி சொல்ல முன்வந்த பின்னர் தான், மற்ற சாட்சிகள் துணிந்து வந்தனர். தற்போது, மிரட்டல் காரணமாக சாட்சிகள் பின்வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.மாநில மனித உரிமை
ஆணையம் விசாரணை
அஜித்குமார் மரணம் தொடர்பாக, நாளிதழ்களில் வெளியான செய்திகள் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து, விசாரணையை துவக்கியுள்ளது. மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வு பிரிவு ஐ.ஜி., விசாரணை நடத்தி, ஆறு வாரங்களுக்குள் ஆணைய தலைவரிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.போலீசை கண்டித்து
மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம் அறிக்கை: அஜித்குமார் என்ற இளைஞரை, காவல் துறையினர் படுகொலை செய்துள்ளனர். காவல் துறையினரின் இந்த காட்டுமிராண்டித்தனம் கடும் கண்டனத்திற்குரியது.இந்த கொடூரச் செயலுக்கு துணைபோன அனைவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும். இதுபோன்ற கொடூரச் செயல்கள் இனி நடக்காமல் தடுக்க, தமிழக அரசும், காவல் துறையும்நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி, வரும் 6ம் தேதி மாலை 4:00 மணிக்கு, திருப்புவனம் சந்தை திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
'சிறப்பு லாக்கப்'களுக்கு
தடை வருமா ?
தமிழகத்தில் பல போலீஸ் நிலையங்களில், இரும்பு ராடு, பிளாஸ்டிக் பைப், கைதாவோரை தொங்க விட கயிறு என சிறப்பு லாக்கப்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வழக்குகளில் பிடிபடுவோரை, 'கைது' என ஆவணப்படுத்தும் முன், 'உரிய முறையில் விசாரிக்க' தனிப்படையினர் இது போன்ற சிறப்பு லாக்கப்களை பயன்படுத்துகின்றனர். இந்த இடங்களில் சட்டவிரோதமாக, போலீசார் நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது. தமிழக அரசு, தனிப்படைகளை கலைத்தது போல, அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் இந்த சிறப்பு லாக்கப்களையும் மூட வேண்டும் என வலியுறுத்தி, சிவகங்கை மாவட்ட சமூக நல அமைப்புகள், கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி, கலெக்டரிடம் மனு அளித்தன. தமிழக மக்கள் மன்ற தலைவர் ராஜ்குமார் கூறுகையில், ''சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடி பகுதி மித்ராவயலில், சிறப்பு லாக்கப் செயல்படுகிறது. இதுபோன்று தமிழகத்தில் பல இடங்களில் சிறப்பு லாக்கப்கள் என்ற சித்திரவதை கூடங்கள் உள்ளன. இந்த சித்திரவதை கூடங்களை மூட வேண்டும்,'' என்றார்.