உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டவிதிகளின்படியே கோவில் நிலங்களில் கட்டுமானம்; ஐகோர்ட்டில் அறநிலையத்துறை பதில்

சட்டவிதிகளின்படியே கோவில் நிலங்களில் கட்டுமானம்; ஐகோர்ட்டில் அறநிலையத்துறை பதில்

சென்னை:'கோவில் அறங்காவலர் குழு தீர்மானத்தின்படி, சட்ட விதிகளை பின்பற்றியே, கோவில் நிலங்களில் கோவில் நிதியை பயன்படுத்தி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை பதிலளித்துள்ளது. அறநிலையத்துறை சட்ட விதிகளை மீறி, கோவில் நிலங்களில், கோவில் நிதி 1,000 கோடி ரூபாயை பயன்படுத்தி, கலாசார மையங்கள், நிர்வாக கட்டடங்கள் கட்டும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மயிலாப்பூரை சேர்ந்த 'இண்டிக் கலெக்டிவ்' அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர்.ரமேஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை கமிஷனரின் பதில் மனுவை, சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் தாக்கல் செய்தார்.

அதன் விபரம்:

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமாக, 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன; 23 ஆயிரம் கடைகள், 76,500 கட்டுமானங்கள் உள்ளன. வருவாய் இல்லை இவற்றின் வாயிலாக, கடந்தாண்டு ஏப்ரல் முதல், 2025 மார்ச் வரையிலான ஓராண்டு காலத்தில், 345.06 கோடி ரூபாய் குத்தகை வருமானம் கிடைத்துள்ளது. ஆனால், பாசன வசதி இல்லாததாலும், நகரமயமாதல் காரணமாகவும், பெரும்பாலான நிலங்களில் இருந்து எந்த வருவாயும் ஈட்ட முடிவதில்லை. இந்த நிலங்களில் திருமண மண்டபங்கள், அரங்கங்கள், கடைகள் கட்டுவதன் வாயிலாக, கோவிலுக்கு வருவாய் கிடைக்கும். அதுமட்டுமின்றி, ஆக்கிரமிப்புகளில் இருந்தும், இந்த நிலங்களை பாதுகாக்க முடியும் என்பதால், கட்டுமானங்கள் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. முறையாக உரிய ஆய்வுகள் நடத்திய பின்னரே, இந்த நிலங்களில் கட்டுமானங்கள் கட்டி, வருவாய் ஈட்ட முடிவானது. அறங்காவலர் குழு தீர்மானத்தின் அடிப்படையில், உரிய அனுமதிகளை பெற்ற பின், இந்த கட்டுமானங்கள் கட்டப்படுகின்றன. அறநிலையத்துறை சட்ட விதிகளின்படியே, இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகக்கூடாது என்பதை கருத்தில் வைத்து, அந்த நிலங்களில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நீக்க வேண்டும் கோவில் நிலங்களில் கட்டுமானங்கள் மேற்கொள்ள, கோவில் உபரி நிதியை பயன்படுத்த கூடாது என, எந்த சட்டப்பிரிவும் தெரிவிக்கவில்லை. அதனால், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என, இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நீக்க வேண்டும்.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. 'எந்த கோவிலுக்கு, எந்த சட்ட விதியை மீறி, கோவில் நிதி பயன்படுத்தப்பட்டது' என்பது குறித்து விளக்க மனு தாக்கல் செய்யும்படி, மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆக., 8க்கு தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Suresh
ஜூலை 30, 2025 07:59

பழனி ராமேஸ்வரம் கோவில் வேலை வாய்ப்பு வெளி வந்து 6 மாதம் ஆச்சு இது வரை நேர்காணல் நடக்கவில்லை இதை பற்றி எந்த நியூஸ் பேப்பர் வெளிப்படுத்த வில்லை இதை நம்பி எத்தனை இலச்சம் பட்டதாரி காத்து கிட்டு இருக்கிறாற்கள் நீங்காலவது இதெற்கு ஒரு முடிவு சொல்லுங்களேன் இதன் மூலம் பல பேர் வாழ்க்கைக்கு வழி காட்டுங்கள்


Sureekumar
ஜூலை 28, 2025 08:34

மற்ற மதத்தினருக்கு லீஸெகோ ரெண்டுக்கோ விடகூத. ஹிந்துயிசம் மீது நம்பிக்கை மற்றும் வழிபாடு செய்பவர்க்ஸ்கிக்கு மட்டுமே கோயிலின் பணம் உபயோகப்பட வேண்டும். முடிந்தால் காங்ற்றச்ட் போடும்போது, இது மதத்தையோ ஹிந்து மத கடவுள்ககையோ எதிர்த்தோ அல்லது பிரச்சாரத்து ஆதவராவாக நடவடிக்கையில் ஈடு பட மாட்டோம் என்று கையெஸுது போடவேண்டும்.


சமீபத்திய செய்தி