உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலவச அரிசியை தவறாக பயன்படுத்தினால் கிரிமினல் நடவடிக்கை: அரசு எச்சரிக்கை

இலவச அரிசியை தவறாக பயன்படுத்தினால் கிரிமினல் நடவடிக்கை: அரசு எச்சரிக்கை

சிவகங்கை : இலவச அரிசியை ஆடு,மாடுகளுக்கு தீவனமாக வழங்குபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க மாவட்ட அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வராக ஜெ.,பதவி ஏற்றதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ ஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்ட அரிசி இனி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார்.குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 12 முதல் 20 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் 35 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை ஜூன் 1 முதல் அமலில் உள்ளது.

எச்சரிக்கை: ரேஷன் கடைகளில் தரமான அரிசியை மட்டுமே வினியோகிக்க வேண்டும் என தமிழக அரசு, வழங்கல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. ரேஷனில் தற்போது பழுப்பு இல்லாத வெள்ளை நிறத்திலான அரிசி வழங்கப்படுகிறது. தற்போதும் கிராமப்புறங்களில் ரேஷனில் வழங்கப்படும் அரிசியை மாடு, ஆடுகளுக்கு அரைத்து கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் இது போன்று ரேஷன் அரிசியை தவறாக உபயோகிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

வழங்கல் துறை அதிகாரி கூறுகையில்,'' ரேஷன் அரிசியை கடத்தி விற்பனை செய்பவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படுமோ அதே தண்டனை ரேஷன் அரிசியை மாடு, ஆடுகளுக்கு வழங்குபவர்களுக்கும் வழங்கப்படும். இது போன்ற வழக்குகளில் சிக்குபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்