உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு உத்தரவிட்டும் பட்டா கிடைக்கவில்லை 30 ஆண்டுகளாக 42 குடும்பங்கள் காத்திருப்பு

அரசு உத்தரவிட்டும் பட்டா கிடைக்கவில்லை 30 ஆண்டுகளாக 42 குடும்பங்கள் காத்திருப்பு

சென்னை: 'திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் தாலுகாவில், 42 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு, அரசு உத்தரவிட்டும், 30 ஆண்டுகளாக பட்டா கிடைக்கவில்லை' என புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வாயிலாக, ஏழை மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்துார் தாலுகா, கொத்தந்தவாடி கிராமத்தில் வசிக்கும், 50க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பங்களை சேர்ந்தவர்கள், வீட்டு மனை பட்டா கோரி வந்தனர். அதே கிராமத்தில், நிலம் தேர்வு செய்து, அவர்களுக்கு பட்டா வழங்க அரசு ஒப்புதல் அளித்தது. கொத்தந்தவாடி கிராமத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள், 1.53 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்தனர். தவறான தகவல் அந்த நிலத்தில், 42 குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதுதொடர்பான விபரம், மாவட்ட அளவில் அரசிதழில், 1995 அக்டோபர், 31ல் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், தொடர் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. ஆனால், தற்போது வரை அவர்களுக்கு பட்டா வழங்கவில்லை. இதுகுறித்து, அக்கிராமத்தைச் சேர்ந்த டி. தர்மலிங்கம் கூறியதாவது: எங்களுக்கு, 1995ல் நிலம் ஒதுக்கப்பட்டு, 42 குடும்பங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலராக இருந்தவர், இலவச பட்டா வழங்கப்பட்டு விட்டதாக மேல் அதிகாரிகளுக்கு தவறாக தகவல் தெரிவித்துள்ளார். பணி முடக்கம் விசாரித்ததில், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் சிலரின் தலையீட்டால், பட்டா வழங்கும் பணி முடங்கி இருப்பது தெரியவந்தது. மேலும், உள்ளூர் அரசியல் புள்ளிகள் சிலர், அந்த நிலத்தை அபகரிப்பதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டுஉள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில், உரிய விசாரணை நடத்தி, ஆதிதிராவிடர் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை மீட்டு கொடுக்க வேண்டும். அரசு உத்தரவுபடி, 30 ஆண்டுகளாக காத்திருக்கும், 42 குடும்பங்களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை