தேவர் சொத்து ஒப்படைக்க நேரடி வாரிசுதாரர் நீதிமன்ற உத்தரவுடன் கலெக்டரிடம் முறையீடு
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் நேரடி வாரிசுகள் நாங்கள் தான், அவரது சொத்துக்களைஎங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கமுதியை சேர்ந்தவர்கள் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவுடன் கலெக்டரிடம் முறையிட்டனர்.கமுதி அருகே மேலராம நதி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்,முத்துரத்தினம், நாகஜோதி, தெய்வராணி, வாசுகி, மு.இந்துராணி, சி. இந்துராணி ஆகியோர் வழக்கறிஞர்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: சுதந்திர போராட்ட வீரர் உ.முத்துராமலிங்க தேவரின் தந்தை உக்கிரபாண்டித்தேவருக்கு இந்திராணி, நாகம்மாள்என இரு மனைவிகள் இருந்தனர். இந்திராணியின் மகன் முத்துராமலிங்க தேவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.2வது மனைவி நாகம்மாளின் மகள் இந்துராணி. இவருக்கு நாகலிங்க தேவருடன் திருமணமாகி நா.ராஜாமணி, நா.முத்துராமலிங்கம் என இருமகன்கள் உள்ளனர்.ராஜாமணிக்கு இரு குழந்தைகள். அதில் ஒருவர்உக்கிரபாண்டி. திருமணம் செய்யாமல் இறந்து விட்டார்.மகள்இந்துராணி உள்ளார்.நா.முத்துராமலிங்கம் மகன் மணிகண்டன், மகள்கள் நாகஜோதி, தெய்வராணி, வாசுகி, இந்துராணி ஆகியோர்வாரிதாரர்களாக உள்ளோம்.பசும்பொன் தேவரின் சொத்துக்களை ஒப்படைக்க வலியுறுத்தி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வாரிசு உரிமை வழக்கு நடந்தது.இதில் காந்தி மீனாள் என்பவர் மேல்முறையீட்டு விசாரணையில் மே 29 ல் உக்கிரபாண்டித் தேவருக்கு நாங்கள் தான் வாரிசுகள்என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.அதன்படி பசும்பொன் கோயில் நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து உரிமைகள், சொத்துக்களை எங்களிடம் பெற்றுத்தர வேண்டும். தேவர் குருபூஜை (அக்.,28 முதல் 30 வரை) நடைபெறும் போது உக்கிரபாண்டி தேவரின் வாரிசுகளான நாங்களும் சம்பிரதாய சடங்குகளில் பங்கு கொள்ள வேண்டும்.அதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தினர். நீதிமன்ற தீர்ப்பு மற்றும் மனு குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.*இதுகுறித்து தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் கூறியதாவது:நாகம்மாள் வாரிசுதாரர்கள் யாரும் முத்துராமலிங்க தேவரின் நேரடி வாரிசுகள் அல்ல. வாரிசு சட்டப்படி நான் தான் முத்துராமலிங்கத் தேவரின் நேரடி வாரிசு. தற்போதைய உயர்நீதிமன்ற உத்தரவில் தேவரின் நினைவிடம் கோயில் அமைந்துள்ள பகுதி எனது கட்டுப்பாட்டிலும், பராமரிப்பிலும் உள்ளது அதில் நாகம்மாளின் வாரிசுதாரர்கள் யாரும் சுவாதீனம் கொள்ள முடியாது என தீர்ப்பிலேயே கூறப்பட்டுள்ளது.உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம் என்றார்.