| ADDED : பிப் 03, 2024 12:48 AM
சென்னை:காவிரி வடக்கு வன விலங்கு சரணாலயத்தில், 50 ஆண்டுகளுக்கு பின் புலிகள் நடமாடுவது, கேமராவில் பதிவாகி உள்ளது.இதுகுறித்து, வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்ட செய்திக்குறிப்பு: காவிரி வடக்கு வனவிலங்கு சரணாலயம், ஓசூர் வனக்கோட்டம், ஜுவாலகிரி காப்புக்காடுகள் சரகப் பகுதியில், 50 ஆண்டுகளுக்கு பின், இரண்டு புலிகள் தென்பட்டுள்ளன; இது, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.ஜுவாலகிரி காப்புக்காடுகள் சரகப் பகுதியில், கடந்த மாதம் பொருத்தப்பட்ட கேமராக்களில், நான்கு முதல் ஐந்து வயதுள்ள மற்றும் எட்டு முதல் ஒன்பது வயதுள்ள, இரண்டு ஆண் புலிகளின் புகைப்படங்கள் பதிவாகி உள்ளன.இந்த காப்புக்காடுகள் சரகம், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட, காவிரி தெற்கு வன உயிரின சரணாலயத்தை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதி. இங்கு புலிகளின் நடமாட்டம் காணப்படுவதிலிருந்து, பன்னார் கட்டா தேசிய பூங்கா மற்றும் அதன் அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் இருந்து, புலிகள் இங்கு வசிக்க உகந்த வனப்பகுதியாக மாறி உள்ளதை அறியலாம்.இதற்கு தமிழக அரசு வன உயிரினங்களைப் பாதுகாக்க எடுத்து வரும் நடவடிக்கைகளே காரணம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.