| ADDED : டிச 06, 2024 02:33 PM
புதுடில்லி: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு விரைந்து உதவ வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த காங்., எம்.பி., பிரியங்கா வலியுறுத்தியுள்ளார். கடந்த ஜூலை 30ம் தேதி கேரளாவின் வயநாட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பஞ்சிரிமட்டம், சூரமலை மற்றும் முண்டக்கை ஆகிய 3 கிராமங்கள் மண்டோடு மூழ்கடிக்கப்பட்டன. இதில் சுமார் 400 பேர் உயிரிழந்தனர். அப்பகுதி மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளையும், உதவிகளையும் எதிர்நோக்கி உள்ளனர். இதனிடையே, வயநாட்டுக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்., வேட்பாளர் பிரியங்கா வெற்றி பெற்றார். தற்போது பார்லிமென்ட் கூட்டத்தில் பங்கேற்று வரும் அவர், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு மத்திய அரசு மேலும் உதவிகளை வழங்க வலியுறுத்தி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விபர அறிக்கையை சமர்பிக்க கேரள அரசு தாமதம் செய்ததாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, வயநாடு எம்.பி., பிரியங்காவிடம் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: இரு கட்டங்களாக ரூ.291.20 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ரூ.782.99 கோடி மாநில பேரிடம் நிவாரண நிதியில் இருக்கிறது. வயநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை செய்து கொடுப்பதிலும் தாமதம் செய்யப்பட்டுள்ளது, எனக் கூறினார். அமித்ஷாவுடனான சந்திப்பிற்கு பிறகு பிரியாங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பேரிடரில் அரசியல் செய்யக் கூடாது. மனிதநேயத்துடனும், இரக்கத்துடனும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முயற்சிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளை நம்பியே வயநாடு மக்கள் உள்ளனர். அவர்கள் எந்த பரிதாபத்தையும் எதிர்பார்க்கவில்லை.கண்ணியத்துடன் அவர்களின் வாழ்க்கையை கட்டமைக்க விரைவான உதவி தேவை. அரசின் அனைத்து நிலைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் போது இந்தியா வலிமையாக எழுந்து நிற்கும். அதற்கான பொறுப்பை உணர்ந்து, மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.