திருப்பூர்:இளம் வாக்காளருக்கு அடையாள அட்டை அனுப்பும் செலவிலேயே, ஆக்கப்பூர்வமான தேர்தல் விழிப்புணர்வை, தேர்தல் கமிஷன் ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் கமிஷன் சார்பில், வாக்காளர் இறுதி பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிய வாக்காளருக்கு, அடையாள அட்டை, விரைவு தபால் மூலம் வினியோகிக்கப்படுகிறது. 'வாக்காளர் என்பதில் பெருமிதம் கொள்வோம்', வாக்காளர் சேவைக்கான செயலியை நிறுவவும்', 'வாக்களிக்க தவறாதீர்கள்', 'உங்கள் வாக்கு முக்கியமானது' என்ற விழிப்புணர்வு வாசகத்துடன், தபால் உறை தயாரிக்கப்பட்டுள்ளது. தபால் உறையில், voterportal.eci.gov.inஎன்ற தேர்தல் கமிஷன் இணையதள முகவரி, வாக்காளர் உதவி எண் -1950, மாற்றுத்திறன் வாக்காளர் செயலி போன்ற விவரமும் இடம்பெற்றுள்ளது.வாக்காளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் பின்புறம், வாக்காளர் உறுதிமொழி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளது. சிந்தித்து தேர்ந்தெடுங்கள்
'உலகின் மிகப்பெரிய மக்களாட்சியின் ஓர் அங்கமான மற்றும் மதிப்புமிக்க உறுப்பினராக உங்களை, இந்திய தேர்தல் கமிஷன் வரவேற்கிறது,' என்ற வரவேற்புடன் கடிதம், தமிழில் அனுப்பி வைக்கப்பட்டுகிறது.'உங்கள் பிரதிநிதியை அறிவுப்பூர்வமாக சிந்தித்து தேர்ந்தெடுக்க, ஒவ்வொரு தேர்தலிலும் நீங்கள் பங்கேற்க வேண்டும்', 'நாட்டின் எதிர்காலத்தை குறிக்கும் அடையாளமாக, மையிடப்பட்ட உங்கள் விரலை பெருமையுடன் உயர்த்திக்காட்டுங்கள்! மகத்தான பயணத்தை தொடங்கியதற்கு வாழ்த்துக்கள்...!' என, மாவட்ட தேர்தல் அலுவலர் வாயிலாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் கமிஷன் வழிகாட்டுதலுடன், மாவட்ட தேர்தல் அலுவலரின் கடிதமும், அடையாள அட்டையுடன் கிடைப்பதால், மக்களாட்சியில் நாமும் ஓர் அங்கமாகிவிட்டோம் என்று, ஒவ்வொரு இளம் வாக்காளரும் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்துள்ளனர்.