சென்னை: மாநிலம் முழுதும், 234 சட்டசபை தொகுதி களிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை, இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டபடி நாளை துவங்கவுள்ளது. இறந்தவர்கள், முகவரி மாறியவர்களின் பெயர்கள், தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று வருகின்றன. பல வாக்காளர்களின் பெயர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் இடம் பெற்றுள்ளன. எனவே, தகுதியான வாக்காளர்களை மட்டுமே பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும்; போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள, இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்து உள்ளது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், நாளை முதல் டிசம்பர் 4ம் தேதி வரை, வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை அரசியல் கட்சிகளின் ஏஜன்டுகளுடன் இணைந்து, அரசு ஊழியர்கள் மேற்கொள்ள உள்ளனர். இதை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ம் தேதியும், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ம் தேதியும் வெளியிடப்பட உள்ளன. இதற்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அரசியல் கட்சிகளின் கூட்டத்தில், எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை ஒத்தி வைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது . இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது: தமிழகத்தில் 2002 மற்றும் 2005ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, வாக்காளர் கணக்கெடுப்பு பணி நாளை துவங்கவுள்ளது. இந்த பட்டியல்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் உள்ளன. இந்த பட்டியல்களுடன், அனைத்து வீடுகளுக்கும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்லப்போவது இல்லை. எந்தெந்த வீடுகளில் 2002 மற்றும் 2005ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதோ, அந்த வீடுகளுக்கு மட்டுமே செல்வர்.அந்த வீடுகளில் யாராவது இருந்தால், அவர்களின் விபரத்தை கேட்டு, வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை வழங்குவர். அந்த வீட்டில், 18 வயது நிரம்பியவர்கள் இருந்தால், அதற்குரிய விண்ணப்ப படிவம் மற்றும் உறுதிமொழி படிவத்தையும் வழங்குவர்.அவற்றை உடனடியாக பூர்த்தி செய்து தர வேண்டும் என்று அவசியம் இல்லை. அடுத்த முறை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வரும் போது, ஆவணங்களுடன் அவற்றை சமர்ப்பித்தால் போதும். இதற்காக, ஒரு வீட்டிற்கு மூன்று முறை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்வர். கடந்த 2002 மற்றும் 2005ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தங்களது பெற்றோர், தாத்தா, பாட்டி பெயர்கள் இருந்தால், அதை தெரிவிக்க வேண்டும். உரிய ஆவணங்களை காட்டி, டிசம்பர் 9ம் தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறலாம். முகவரி மாற்றம் எதுவும் இருந்தால், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாது. முகவரி மாறியவர்களும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களும், அதற்கான ஆவணங்களை டிசம்பர் 9ம் தேதி முதல், ஜனவரி மாதம் 8ம் தேதிக்குள் சமர்ப்பித்து, தங்களது பெயர்களை இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார். தேர்தல் அலுவலருடன் 12 ஏஜென்ட்கள் தமிழகத்தில் 70,000த்திற்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இவற்றை, 1,200 வாக்காளர்களுக்கு ஒன்று என்ற அளவில் விரிவுபடுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. இதற்கான பணிகளும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியின் போது மேற்கொள்ளப்பட உள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் பூத் ஏஜென்ட்கள் உள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளின் பூத் ஏஜென்ட்களுக்கு, இப்பணியில் ஈடுபட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ஓட்டுச்சாவடி அலுவலர்களுடன், 12 பூத் ஏஜென்ட்களும் வாக்காளர்களின் வீடுகளுக்கு செல்லவுள்ளனர். கடந்த காலங்களில் ஒவ்வொரு பூத் ஏஜென்டும், 10 பேர் வரை சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதன் வாயிலாக, 15 முதல் 20 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், தங்கள் வாயிலாகவே புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும்; முகவரி மாற்றம் செய்தவர்களை இடம் பெற செய்ய வேண்டும் என, ஒவ்வொரு கட்சியின் பூத் ஏஜென்ட்களும் வலியுறுத்துவர் என்பதால், ஓட்டுச்சாவடி அலுவலர்களிடையே மோதல் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால், வாக்காளர்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.