கோவை : கோவையில், 35 கோடி ரூபாய் மதிப்புள்ள ஏழு ஏக்கர் நிலம் அபகரிக்க முயன்ற வழக்கில், பாதிரியார் உட்பட ஆறு பேர் மீது, வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர். கோவை, துடியலுார் அருகேயுள்ள குருடம்பாளையத்தில், ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட வேர்ல்டு மிஷனரி இவாஞ்சலின் ஆப் இந்தியா தன்னார்வ அமைப்பு மற்றும் குழந்தைகள் காப்பகம் செயல்படுகிறது. வட்டமலைபாளையத்தை சேர்ந்த ஜெயபால்,73, என்பவர், 39 ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறார். இந்த அமைப்புக்கு சொந்தமாக குருடம்பாளையத்தில், ஏழு ஏக்கர் நிலம் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு 35 கோடி ரூபாய். இந்நிலையில் நாக்பூரை சேர்ந்த, பாதிரியார் ஜான் அகஸ்டின், வேர்ல்டு மிஷனரி புதிய தலைவர் என்று கூறி, போலி ஆவணம் தயாரித்து ஏழு ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்தார். நிலத்தின் ஆவணங்கள் தொலைந்து விட்டதாக, ஆர்.எஸ்.புரம். போலீசில் சான்றிதழ் பெற்று, பெ.நா.பாளையம் பதிவாளர் அலுவலகத்தில், அவரது பெயருக்கு நிலத்தை மாற்றி பத்திரப்பதிவு செய்தார். ஜெயபால் அளித்த புகாரின் பேரில், அவரது பெயருக்கு மாற்றப்பட்ட பத்திரப்பதிவு ஆவணம் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக, கோவை ஜே.எம்:1, கோர்ட்டில் வக்கீல் பால்பாண்டியன் வாயிலாக புகார் மனு தாக்கல் செய்தார். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கோர்ட் உத்தரவிட்டது. இது தொடர்பாக, பாதிரியார்கள் ஜான்அகஸ்டின்,64, உடந்தையாக இருந்த ஜோயல்,55, மற்றும் முகமது ஹசீம்,53, ரகுப்அலி, வில்சன், இம்மானுவேல்தாஸ் ஆகியோர் மீது, ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.