உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலவச மாணவர் சேர்க்கை விபரம் தனியார் பள்ளிகளுக்கு கெடு நீட்டிப்பு

இலவச மாணவர் சேர்க்கை விபரம் தனியார் பள்ளிகளுக்கு கெடு நீட்டிப்பு

சென்னை:கல்வி உரிமை சட்டத்தின் படி, தனியார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர் விபரங்களை, வரும் 17ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, தனியார் பள்ளிகள் இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டார். இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் நல சங்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் வாதாடியதாவது: கல்வி உரிமை சட்டத்தையும், 25 சதவீத இட ஒதுக்கீட்டையும் அமல்படுத்த, மத்திய அரசு நிதி ஒதுக்காததால், நடப்பாண்டில் தாமதம் ஏற்பட்டது. தமிழகம் முழுதும், 7,717 பள்ளிகளில், 81,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்றுஉள்ளனர். அந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை வழங்கும் வகையில் மட்டுமே, மாணவர்களின் பட்டியல் கோரப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் வாதாடினார். இதை கேட்ட நீதிபதி, 'கல்வி கட்டணத்தை திருப்பி வழங்கும் வகையில் மட்டுமே, இந்த சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், மாணவர்களின் விபரங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம், அக்., 17ம் தேதியில் இருந்து, அக்., 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. 'புதிதாக எந்த மாணவர் சேர்க்கையும் மேற்கொள்ளக் கூடாது' என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை