உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கலைஞர் பல்கலை மசோதா கவர்னரின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அரசு வழக்கு

கலைஞர் பல்கலை மசோதா கவர்னரின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அரசு வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:கும்பகோணம் கலைஞர் பல்கலை சட்ட மசோதாவை, ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர் ரவியின் முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலையை பிரித்து, புதிதாக கும்பகோணத்தில் கலைஞர் பல்கலையை உருவாக்குவதற்கான சட்ட மசோதா, கடந்த ஏப்ரல், 29ம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில், 'கலைஞர் பல்கலை வேந்தராக தமிழக முதல்வரும், இணை வேந்தராக உயர் கல்வித்துறை அமைச்சரும் இருப்பர். வேந்தரின் முன் அனுமதியின்றி பட்டங்கள் வழங்க முடியாது. தேடல் குழு தேர்வு செய்யும் மூவர் பட்டியலில் இருந்து துணை வேந்தரை, வேந்தர் நியமிப்பார்' என்று கூறப்பட்டிருந்தது. 'துணை வேந்தர் தேடல் குழுவில், வேந்தரின் பிரதிநிதியாக உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, அரசு பிரதிநிதியாக ஒரு கல்வியாளர் அல்லது முதன்மை செயலர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி, சிண்டிகேட் பிரதிநிதியாக, மாநில அல்லது மத்திய பல்கலை துணை வேந்தர் உள்ளிட்ட கல்வியாளர்கள் இடம் பெறுவர்' என்றும், மசோதாவில் கூறப்பட்டிருந்தது. கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட இந்த மசோதாவை, கடந்த ஆகஸ்ட், 5ம் தேதி, ஜனாதிபதிக்கு அனுப்பினார் கவர்னர் ரவி. இந்நிலையில், கவர்னரின் முடிவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், 'கலைஞர் பல்கலை சட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பியது, சட்டசபை முடிவுக்கு எதிரானது. எனவே, இதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகும் தமிழக அரசு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை, கவர்னர் ரவி நிலுவையில் வைத்திருப்பதற்கு எதிராக, தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அதை, கடந்த ஏப்ரல் 8ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, கவர்னரால் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள, 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கியது. இதுதொடர்பாக, ஜனாதிபதி எழுப்பிய கேள்விகள் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கலைஞர் பல்கலை மசோதாவை, ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னரின் முடிவை எதிர்த்து, தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை