அனுமதி பெறாத கட்டடங்களுக்கு அபராதத்தை உயர்த்தியது அரசு
சென்னை:அனுமதி பெறாத கட்டடம் மற்றும் அனுமதி பெற்றதை விட கூடுதலாக கட்டப்பட்ட கட்டடம் போன்றவற்றுக்கு விதிக்கப்படும் அபராதத்தை, ஜூலை 1 முதல் அதிகரிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், கட்டடங்களுக்கு வரி விதிக்கும்போது, அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடம், அனுமதி பெற்று அதைவிட கூடுதலாக கட்டப்பட்ட கட்டடம் போன்றவற்றுக்கு, அனுமதிக்கான கட்டணத்துடன் அபராதமும் வசூலிக்கப்பட்டது.இதுநாள் வரை அபராதமாக, சதுர அடிக்கு, 20 முதல் 25 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. இத்தொகை, கட்டட அனுமதி பெறும் கட்டடங்களுக்கான கட்டணம், சதுர அடிக்கு, 88 ரூபாய் என்பதை விட குறைவு என்பதால், அதை அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.இதன்படி, ஜூலை 1 முதல், அனுமதி பெறாத, அனுமதிக்கு அதிகமாக கட்டப்பட்ட கட்டங்களுக்கு, கூடுதல் அபராதம் வசூலிக்கப்படும். அதாவது, குடியிருப்பு கட்டடங்களுக்கு, சதுர அடிக்கு 88 ரூபாய்; குடியிருப்பு இல்லாத கட்டடங்களுக்கு, சதுர அடிக்கு, 110 ரூபாய், அபராதத் தொகையாக வசூலிக்கப்படும். இதுதொடர்பாக, உள்ளாட்சி அமைப்புகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளன.