தென்காசியில் அரசு வழக்கறிஞர் வெட்டிக் கொலை: வழக்கறிஞர்கள் மறியல் போராட்டம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
தென்காசி: தென்காசியில் அரசு வழக்கறிஞர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டம் ஊர் மேலழகியான் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசுவாமி (42). தென்காசி செங்கோட்டை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர். தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் துணை அமைப்பாளராகவும் இருந்தார். கூலக்கடை பஜாரில் வழக்கறிஞர் அலுவலகம் நடத்தி வந்தார்.இன்று (டிச.3) அலுவலகத்தில் இருந்தபோது, மர்ம நபர் ஒருவர் முத்துக்குமாரசுவாமியை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினார். அவர் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தோர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தென்காசி போலீசார், காயமடைந்த முத்துக்குமாரசுவாமியை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.தகவலறிந்த தென்காசி மாவட்ட எஸ்பி அரவிந்த் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினார். கொலைக்கான காரணம் மற்றும் மர்ம நபரின் அடையாளம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமி கொலை சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்கள், தென்காசி புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் நடுபஜார் பகுதிகளில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.