உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மணல் குவாரிகளை திறக்க அரசு திட்டம் கண்காணிப்பு அதிகாரி திடீர் மாற்றம்

மணல் குவாரிகளை திறக்க அரசு திட்டம் கண்காணிப்பு அதிகாரி திடீர் மாற்றம்

சென்னை:பருவமழை முடிந்ததும், மணல் குவாரிகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில், அவற்றை கண்காணிக்கும் பொறுப்பை, வேறு அதிகாரிக்கு மாற்றி நீர்வளத்துறை உத்தரவிட்டு உள்ளது.நீர்வளத்துறையில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நான்கு மண்டலங்கள் உள்ளன. இவற்றுக்கு தனித்தனியாக தலைமை பொறியாளர்கள் உள்ளனர். மண்டலங்களில் நடக்கும் பணிகளை கண்காணித்தல், பதவி உயர்வு, பணியிடமாற்றம் உள்ளிட்டவற்றை கவனிக்கும் பொறுப்பு, முதன்மை தலைமை பொறியாளரிடம் உள்ளது. சென்னை மண்டலத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், வேலுார், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்கள் உள்ளன. இம்மாவட்டங்களில் உள்ள பாலாறு, கொசஸ்தலை, அடையாறு, கூவம், பெண்ணையாறு உள்ளிட்டவற்றில், நீர்வளத்துறை வாயிலாக மணல் குவாரிகள் அவ்வப்போது திறக்கப்படுகின்றன.குவாரிகளை கண்காணிப்பதற்கு பொறியாளர் தலைமையில், சென்னை மற்றும் விழுப்புரத்தில் பிரிவு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இவை, முதன்மை தலைமை பொறியாளர் மன்மதனின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடப்பதாக கூறி, மணல் குவாரிகள், ஒப்பந்ததாரர்கள், அப்போது பணியில் இருந்த அதிகாரிகள் வீடுகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் 'ரெய்டு' நடத்தினர். பல கோடி ரூபாய் ரொக்கம், தங்க நகைகள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.இதனால், தற்போது நிர்வாக பணிகளை கவனிக்கும் முதன்மை தலைமை பொறியாளருக்கு நெருக்கடி ஏற்பட்டது. அமலாக்கத்துறை விசாரணை மற்றும் நீதிமன்ற வழக்குகளில் அடிக்கடி ஆஜராக வேண்டியுள்ளது. எனவே, குவாரிகளை கண்காணிக்கும் பொறுப்பை, சென்னை மண்டல தலைமை பொறியாளர் ஜானகிக்கு மாற்றி, அரசு உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை முடிந்ததும், மணல் குவாரிகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதனால் தான், குவாரிகளை கண்காணிக்கும் பொறுப்பு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, நீர்வளத்துறை செயலர் மணிவாசன் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை