வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பெண்களுக்காக ஒரு நீதிபதி , ஆஹா , அதை பரவிட்ட அந்த ஆன் நண்பருக்கு கொடுக்கும் தண்டனை இனி யாரும் அது போன்று யோசிக்கவே கூடாது என்பதாக இருக்க வேண்டும் , முடியுமா ?
மேலும் செய்திகள்
வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
21-Jun-2025
சென்னை:'காதலனால் ஏமாற்றப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோக்களை, இணையதளத்தில் இருந்து, 48 மணி நேரத்தில் அகற்ற வேண்டும்' என, மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், பெண் வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த வழக்கு விபரம்:கல்லுாரி படித்தபோது, ஆண் நண்பருடன் காதல் ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்வதாக, அவர் உறுதி அளித்ததை நம்பி, அவருடன் நெருக்கமாக இருந்தேன். அந்த நேரத்தில் நெருக்கமாக இருந்ததை, காதலன் தன் மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.அந்த வீடியோவும், புகைப்படங்களும், இணையதளங்கள், ஆபாச வலைதளங்கள், சமூக வலைதளங்களில் வலம் வந்துள்ளன. இதுகுறித்து, என் நண்பர் சொன்ன பின்னர் தான், நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்து, அவற்றை இணையதளங்களில் காதலன் பதிவேற்றியது தெரியவந்தது.இதுதொடர்பாக, கடந்த ஏப்ரல் 1ல் போலீசில் புகார் அளித்தேன். ஏமாற்றியவர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. உரிய நடவடிக்கை
எனவே, சமூக வலைதளங் கள், இணையதளங்கள், ஆபாச வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோக்களை முடக்கவும் நீக்கவும், எதிர்காலத்தில் அது பரவாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி, ஜூன் 18ல் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தமிழக டி.ஜி.பி.,யிடம் புகார் அளித்துள்ளேன். அந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம், வழக்கறிஞர் ராஜகோபால் வாசுதேவன் ஆஜராகினர். அவர்கள் இருவரும், 'மனுதாரரான பெண் வழக்கறிஞர், அந்த வீடியோக்கள், புகைப்படங்கள் அனைத்தையும், இணையதளம், டிஜிட்டல் தளத்திலிருந்து அகற்ற போராடி வருகிறார். 'தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளின் கீழ், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மட்டுமே வீடியோக்களை பரவாமல் தடுத்து, அவற்றை அகற்றுவதற்கு வழிமுறைகளை வழங்க அதிகாரம் பெற்றது' என்றனர்.இதைக் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:மனுதாரரை பாதிப்புக்கு உள்ளாக்கும் அந்த வீடியோ, புகைப்படங்கள் அகற்றப்பட வேண்டும். 70க்கும் மேற்பட்ட வலைதளங்கள், பல்வேறு தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் தளங்களில் பகிரப்பட்டு உள்ள அந்த வீடியோ காட்சிகளை, 48 மணி நேரத்தில் மத்திய அரசு நீக்க வேண்டும்.இதுபோன்ற விவகாரங்களில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், போலீசாருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, டி.ஜி.பி., உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில், டி.ஜி.பி.,யை எதிர்மனுதாரராக இணைக்கிறேன். இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்த அறிக்கையை, வரும் 14ம் தேதிக்குள், மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார். நீதிமன்றத்தின் கடமை
விசாரணையின்போது, நீதிபதி கூறியதாவது:பொது தளத்தில் பரவி வரும் அந்த வீடியோ காட்சிகளால், மனுதாரர் தன் இயல்பு வாழ்க்கையை இழந்து விட்டார்; அவரது கண்ணியம் பறிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் உதவியற்ற நிலையில் உள்ளார் என்பதை, அறிய முடிகிறது.அதிர்ஷ்டவசமாக மனுதாரர் வழக்கறிஞராக உள்ளதால், அவரால் தனக்கு நேர்ந்த கொடுமையை எதிர்த்து போராட முடிந்தது. இதனால், அவருக்கு நம்மால் உதவ முடிந்தது. இவ்வாறு போராட முடியாதவர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை, யோசிக்க முடியவில்லை. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21ன்படி, தனியுரிமை, கண்ணியத்திற்கான உரிமை உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் கடும் மீறல் நிகழும்போது, குடிமக்கள் அனைவருக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது, நீதிமன்றத்தின் கடமை.ஆனால், மனுதாரரை பொறுத்தவரை, ஒவ்வொரு நொடியும் இது மீறப்படுகிறது. எனவே, இந்த நீதிமன்றம் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, மனுதாரர் எதிர்கொள்ளும், சொல்ல முடியாத வேதனையை குறைக்கும் வகையில், அந்த வீடியோக்களை விரைவில் நீக்கி, குறைந்தபட்சம் எதிர்காலத்திலாவது மனுதாரர் இயல்பு வாழ்க்கை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்.நாடு முழுதும் இளம்பெண்கள் எதிர்கொள்ளும் இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காணும் முயற்சியில், ஏற்கனவே டில்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு, 2021ல் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
விசாரணை முடிவில், பெண் வழக்கறிஞருக்கு நடந்த கசப்பான சம்பவத்தை நினைத்து, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் மிகுந்த வருத்தப்பட்டார். மேலும், சம்பந்தப்பட்ட பெண் வழக்கறிஞரை நேரில் சந்தித்து, அவருக்கு தைரியம் அளிக்க விரும்புவதாகவும் கனத்த குரலுடன் கூறி, கண் கலங்கி உணர்ச்சி வசப்பட்டார்.''அந்த பெண்ணை சந்திக்கும்போது, என்னை நான் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த சமயத்தில் நான் மனம் உடைந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.இதையடுத்து, மாலையில் அந்த பெண் வழக்கறிஞர், நீதிபதியை அவரது அறையில் சந்தித்தார். அப்போது தனக்கு நேர்ந்த சம்பவத்தை, பெண் வழக்கறிஞர் எடுத்து கூறியுள்ளார்.
பெண்களுக்காக ஒரு நீதிபதி , ஆஹா , அதை பரவிட்ட அந்த ஆன் நண்பருக்கு கொடுக்கும் தண்டனை இனி யாரும் அது போன்று யோசிக்கவே கூடாது என்பதாக இருக்க வேண்டும் , முடியுமா ?
21-Jun-2025