உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 8 மாவட்டங்களில் இன்று கனமழை

8 மாவட்டங்களில் இன்று கனமழை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் நேற்றைய அறிக்கை: தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில், 12 செ.மீ., மழை பெய்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய கிழக்கு அரபிக்கடலில், கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால், வரும், 21ல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகலாம். இதன் காரணமாக, அதே பகுதியில், 22ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். தமிழகம் மற்றும் வடக்கு கேரள பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்றும், நாளையும், இடி மின்னலுடன், மணிக்கு 50 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய எட்டு மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம். மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதியில், 22ம் தேதி வரை மணிக்கு, 45 முதல், 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே மணிக்கு, 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !