ஐந்து மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு
சென்னை:'நீலகிரி, கோவை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன் அறிக்கை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக வடமாவட்டங்களின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கில், கிழக்கு, மேற்கு திசை காற்று சந்திப்பு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்றும், நாளையும், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.நாளை மறுநாள், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.தமிழகத்தில் வரும், 5ம் தேதி வரை, அதிகபட்ச வெப்பநிலை, இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்ஷியஸ் வரை படிப்படியாக குறையலாம்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.